வெள்ளி, 14 மே, 2021

தமிழகத்தில் முதலீடு செய்யும் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு மூலதன மானியம்”- சலுகைகளை அறிவித்த தமிழக அரசு!

kalaignarseithigal.com கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனைக் கருத்தில்கொண்டு, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை மே 11 அன்று நடத்தினார்.

அக்கூட்டத்தில், முதல்வர் அறிவுறுத்தலின்படி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பின்வரும் சிறப்புத் தொகுப்பு சலுகைகளை அறிவித்துள்ளது:

(1) ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30% மூலதன மானியம் இரண்டு சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் 2021, ஆகஸ்ட் 15-க்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். 2021 ஜனவரி 1, 2021 முதல் ஆகஸ்ட் 31, 2021 வரை செய்யப்படும் முதலீடுகளும் இதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

(2) குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க ஜனவரி 1, 2021 முதல் நவம்பர் 30, 2021 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30% மூலதன மானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நிறுவனங்கள் 30.11.2021-க்கு முன்னர் உற்பத்தியை தொடங்க வேண்டும்.

(3) அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ஆண்டுக்கு 6% வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும்.

(4) அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட் / சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

(5) அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணம் ஏதுமின்றி ஒற்றைச் சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்.

(6) கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணைபுரியும்.

இந்தச் சிறப்பு தொகுப்பு சலுகைகள் தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: