திங்கள், 5 அக்டோபர், 2020

நரிக்குறவர்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும் ஸ்வேதா !


Fazil Freeman Ali :
· ஊர்விட்டு ஊர் நகர்ந்து கொண்டே இருப்பவர்கள்தான்

நரிக்குறவர்கள். இவர்களில் ஸ்வேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது மட்டும் அல்ல அவரது பெருமை. பொறியியல் படித்து வளாக நேர்முகத்தேர்வில் கை நிறையச் சம்பளத்துடன் கிடைத்த வேலையை, தன் சமூக மக்களின் நலனுக்கு உழைப்பதற்கு உதறித் தள்ளி, இப்போது மூன்று பள்ளிகளை நடத்திவருகிறார் திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர்தான் ஸ்வேதா. "முதல் நாள் கல்லூரி வாசலில் போய் இறங்கியதை என்னால் மறக்கவே முடியாது. அம்மா, அப்பா, தாத்தானு குடும்பத்தோடு போனோம். எங்க தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். தோளில் துப்பாக்கியைத் தொங்கவிட்டுக்கிட்டு, தலையில் முண்டாசு கட்டிய தாத்தா என்னை ஆசீர்வாதம் பண்ணினார்.
"எல்லாரும் வெச்ச கண் வாங்காம வேடிக்கை பார்த்தாங்க. அவங்களுக்கு எல்லாம் அது நகைச்சுவை. ஆனால், எனக்கு வாழ்க்கை'' அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் ஸ்வேதா.
"அப்பா மகேந்திரன், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால் 12-ஆம் வகுப்பு வரை படிச்சவர். அம்மா சீதாவுக்கு பதினைந்து வயது இருக்கும் போதே திருமணம் பண்ணி வைத்து விட்டனர். அப்பாதான் அம்மாவை 10-ம் வகுப்பு வரை படிக்க வச்சிருக்காரு. படிக்கும் போதே அம்மா கர்ப்பமாகிட்டாங்க.
"நான் பிறந்தபிறகு அம்மாவால் பள்ளிக்குப் போய் படிப்பைத் தொடர முடியவில்லை. அவங்களோட இந்தத் தோல்விதான் எப்பாடுபட்டாவது தன் மகளை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை அவர் மனதில் தோன்ற வைத்திருக்கிறது.
"அப்போதெல்லாம் எங்க சமூகத்தில் யாரும் பள்ளிக்குப் போனதில்லை. அப்படியே போனாலும் தொடர்ந்து போக மாட்டார்கள். இதைக் காரணம் காட்டி நான் படிக்கச் சென்ற பள்ளித் தலைமை ஆசிரியர் எனக்குப் பள்ளியில் இடம் கொடுக்க மறுத்தார்.
"அப்போ வசந்தகுமார் என்கிற பிரபல தமிழ் நாளிதழோட செய்தியாளர் எங்க அப்பாவுக்குக் கொஞ்சம் பழக்கம் உள்ளவராக இருந்தார். பொது நலன் குறித்தும் சமூக முன்னேற்றம் குறித்தும் அக்கறை உள்ள அவர், அடிக்கடி எங்க இடத்துக்கு வந்து எங்க மக்களுக்கு உணவு, உடைகள் வாங்கிக் தருவார். தீபாவளி, பொங்கலுக்கு குழந்தைகளை அழைத்து துணிமணிகள், பட்டாசு, கரும்பு, இனிப்பு, சாப்பாடு என வாங்கித் தருவார். அவரோட சிபாரிசாலதான் எனக்குப் பள்ளியில் படிக்க இடம் கிடைத்தது.
"ஆனால் பள்ளியில் நான் சந்திச்ச அவமானங்கள் ஏராளம்.நான் மூணாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையன், `குறத்தி...குறத்தி’னு கிண்டல் பண்ணினான். அதை வீட்டில் சொல்லாம, பள்ளிக்கும் போகாம பத்து நாட்களுக்கும் மேல வீட்டுலயே அழுது கொண்டே இருந்தேன்.
"பிற்பாடு விஷயம் தெரிஞ்சு எங்க அம்மா பள்ளிக்கு அழைச்சிட்டு வந்து ஆசிரியர் கிட்ட பேசி என்னை மறுபடியும் விட்டுட்டு வந்தாங்க. இருந்தாலும் அந்தச் சம்பவம் என் மனசுக்குள்ள ஒரு பயத்தை உருவாக்கிருச்சு. பள்ளி வேன்ல மற்ற பிள்ளைங்ககூடப் பேசவே பயமா இருக்கும். அவங்களும் என்னை நெருங்காமல் தள்ளியே உட்காருவாங்க.
"நான் படிப்பைப் பாதியில் நிறுத்திடக் கூடாதுங்கிறதுல மட்டும் அம்மா விடாப்பிடியாக இருந்தாங்க. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இருந்தே, எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க, ஊர்க்காரங்க நெருக்கடி குடுத்தாங்க.
"அம்மாவும் அப்பாவும் ஊர்ல எங்க சமூகத்துல நடக்கிற நிறைய இளம் வயது திருமணங்களை நிறுத்தி, பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொல்லி, பல காலமாப் போராடிக்கிட்டு இருக்கிறவங்க.
"அதனால அதுக்குப் பழிவாங்கிறதுக்காக எனக்குத் தாலிகட்டி விட்டுடுறேன்னு பல பேர் சுத்துனாங்க. இதுக்குப் பயந்து அம்மா, என்னை திருச்சி ஃபிலோமினா பெண்கள் பள்ளியில் சேர்க்க முடிவு செஞ்சாங்க.
நாங்க அந்தப் பள்ளிக்குப் போகும்போது, நுழைவுத்தேர்வு வைத்துதான் இடம் கொடுப்போம்.இப்போது தேர்வு முடிந்து விட்டது' என்று சொன்னாங்க. அம்மாவும் விடுவதாக இல்லை. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்று இடம் கேட்டார்கள்.
"சரி நாங்கள் உன் பெண்ணுக்கு இடம் தருகிறோம்.ஆனால் எக்காரணம் முன்னிட்டும் இடையில் நின்று விடக்கூடாது" என்ற நிபந்தனையோடு தமிழ் ஆங்கிலம் கணிதம் முதலிய பாடங்களில் நுழைவுத் தேர்வு வைத்து என்னை சேர்த்துக் கொண்டார்கள்.
"ஊருக்கு வந்து போய்க்கொண்டிருந்தால்
திருமணம் சம்பந்தமாக ஊரார் தொல்லை கொடுப்பார்கள் என்று சொல்லி என்னை அந்தப் பள்ளியின் விடுதியில் சேர்த்துவிட்டுட்டாங்க. 'ஊருக்குப் போனா, கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்க'னு நானும் பயந்து படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அங்கேயும் என்னை யாரும் நெருங்கவில்லை; தள்ளியே வைத்திருந்தார்கள்.
"பள்ளிப் படிப்பு முடிச்சு, திருச்சி எம்.ஏ.எம்.
பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிக்க இடம் கிடைச்சது. உள்ளே நுழைஞ்ச முதல் நாள்லயே நான் நரிக்குறவப் பெண்ங்கிற விஷயம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரிஞ்சுடுச்சு.
"ஆனா அவங்களோட வித்தியாசமான பார்வை, ஒதுங்கிப்போறது, கிண்டல் பண்றது எதையும் நான் கண்டுக்கவே இல்லை. நம்ம நோக்கம் படிக்கிறது, அதை விட்டுறக் கூடாதுனு கவனமா படிச்சேன்.
"ஒரு கட்டத்தில் அவர்கள் கொடுத்த தொல்லையால் என்னால் அங்கே படிக்க முடியல. இரண்டாவது ஆண்டு 'என்னை எப்படியாவது இங்கே இருந்து கூட்டிட்டு போயிட்டாங்க' என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டேன். அப்போ அம்மா தான் எனக்கு ஆறுதல் சொல்லி தேத்தி விட்டாங்க.
"அதேநேரம் என்னோட கணவர் அப்போ எனக்கு நல்ல நண்பனாக இருந்தார். அவர் என் சொந்த அத்தைப் பையனும் கூட. அவரும் படி படி என்று ஊக்கம் கொடுத்துக் கொண்டே வந்தார். சரி என்று சமாதானமாகி நல்லபடியாக பொறியியல் படிப்பை படித்து முடித்தேன்'' என்கிறார் ஸ்வேதா.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த ஸ்வேதாவுக்கு வளாக நேர்காணலில் சண்டிகர் மாநிலத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலைக்குச் செல்வது இல்லை என முடிவு எடுத்துவிட்டார்.
"நான் வேலைக்குப் போனா, என் வாழ்க்கை மட்டும்தான் நல்லா இருக்கும். ஆனா, எங்க சமூக மக்கள் இன்னமும் மோசமான நிலைமையில தான் இருக்காங்க. பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறதே இல்லை. இந்த நிலைமையை மாத்தணும்னா நான் இங்கே இருக்கணும். என்னை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற பிள்ளைகளும் படிப்பாங்க'' என்கிறார் ஸ்வேதா.
இவரது இந்தத் தெளிவும் சமூக நோக்கும் இவரது பெற்றோர்களிடம் இருந்து வந்தது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வந்தவர் ஸ்வேதாவின் அப்பா மகேந்திரன். பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ்... இவர்கள் வழிகாட்டிய முற்போக்கு அரசியல் அறிந்தவர்; அவர்களின் கொள்கைகளைப் படித்தவர்.
இப்போது அவர் இல்லை. சிறுநீரகக் கோளாறால் 2017-ல் இறந்துபோய் விட்டார். இறந்தது கூட அவர் நடத்தி வந்த பள்ளிக்கூடத்தில்தான் நடந்தது.
எல்லாத்தையும் படிச்சு, "இந்தச் சமுதாயத்தை தலைகீழா மாத்தணும்"னு
அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். வீட்டுக்கு வந்தா, கஞ்சிக்குக்கூட வழி இருக்காது. காமராஜர் காலத்துல எங்க மக்களுக்கு திருச்சி பெல் நிறுவனம் பக்கத்துல இடம் கொடுத்தாங்க.
"பிறகு அந்த இடத்துல தொழிற்சாலை வருதுனு சொல்லி, தேவராயநேரிக்கு மாத்தினாங்க. அப்போ திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலையப்பன்தான், இடம்கொடுத்து குடியிருப்பு கட்ட வழிசெஞ்சு கொடுத்தார்.
"அவர்தான் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துல பல இடங்கள்ல எங்க மக்களுக்காக இடம் ஒதுக்கி வாழ வழிசெஞ்சார். கூடவே, தன் சொந்த முயற்சியில, எங்க பிள்ளைகளைப் படிக்கவெச்சார். ஆனா, அதை எல்லாம் பயன்படுத்திக்கிற விழிப்புஉணர்வு இல்லாத எங்க மக்கள், அவர் ஏற்படுத்திக்கொடுத்த குடியிருப்புகளை விட்டு அடுத்த நாளே ஓடிவந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கு.
"அவர் நினைவா, திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எங்க மக்கள் வசிக்கிற பல ஊர்களுக்கு 'மலையப்பன் நகர்'னு பெயர் வெச்சிருக்காங்க.
"எத்தனை தடவை பள்ளிக்கு அனுப்பினாலும் மறுபடியும் பாசிமணி விற்க ஓடிவந்திடுவாங்க. இந்த நிலைமையை மாத்தாம எதுவும் பண்ண முடியாதுனு புரிஞ்சுது.
"1980-ல் திருவள்ளுவர் குருகுல ஆரம்பப் பள்ளி என்ற பெயரில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவந்த அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அப்பாவ கூப்பிட்டு, ஒரு ஹாஸ்டல் தொடங்குங்க, நெறைய எம்.பி.சி கிராண்ட்ஸ் எல்லாம் இருக்கு. அதை வெச்சு பிள்ளைங்களுக்கு சாப்பாடு போடலாம்னு சொன்னாரு.
"அப்பா மலையப்பன் பேருல ஒரு தங்கும் விடுதியும், நரிக்குறவர் எஜுகேஷன் வெல்ஃபேர் சொசைட்டின்னு ஒரு அரசு சாரா அமைப்பும் ஆரம்பிச்சாரு. ஹாஸ்டல் தொடங்குனதால நிறைய மாவட்டங்கள்ல இருந்து குழந்தைகள் வந்து தங்கி படிச்சாங்க.
"மாணவர்களோட எண்ணிக்கையும் அதிகமாச்சு, ஹாஸ்டல் குறிப்பா ஆறாவதுல இருந்து எட்டாவது வரை படிக்குற மாணவர்களுக்காகத் தான்... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அந்தப் பள்ளியை நடத்திட்டு இருந்தவங்களால அதைத் தொடர்ந்து நடத்த முடியாமப் போனதால, பள்ளி நடத்துற பொறுப்பும் அப்பா கைகளுக்கு வந்தது.
"திருவள்ளுவர் குருகுலம்'கிற பேரில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளி ஆரம்பிச்சார் அப்பா. வெறும் பள்ளின்னா யாரும் வர மாட்டாங்க. பாசி, ஊசி விற்க ஊர் ஊராப் போகும்போது பிள்ளைங்களையும் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அதனால, `நீங்க வியாபாரத்துக்குப் போங்க, பிள்ளைங்களை இங்கே அனுப்பி வையுங்க.தங்கவெச்சு, சாப்பாடு போட்டு படிப்பு சொல்லித் தர்றோம்'னு சொல்லி வரச் சொன்னார்.
"இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத்தான் எங்க ஜனங்களுக்குக் கல்வியைத் தரவேண்டி இருந்தது'என்று ரொம்ப வேதனைப்பட்டார் அப்பா" என்று அப்பாவின் நினைவுகளில் மூழ்கிப் போகிறார் ஸ்வேதா.
அப்பாவின் இறப்புக்கு பின் அவர் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகிறார் ஸ்வேதா. திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை என்று மூன்று இடங்களில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக இலவசமாக இப்போது பள்ளிகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்.
இப்பள்ளிகள் வளர்ச்சிக்காக சென்ற ஆண்டு நடந்த நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிய கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஸ்வேதா பங்குபெற்று ரூபாய் 3 லட்சத்தி 20000 ரூபாய் பரிசு பெற்று வந்தார்.
இவர் மட்டுமல்ல பேராசிரியராக இருக்கிற இவரது கணவர் மகேந்திரன், மாமியார்,அம்மா மற்றும் சில உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து தான் இந்தப் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள்..!
படிகளில் ஏறும் பலர் கீழ்நோக்கிப் பார்ப்பதே இல்லை; ஸ்வேதா போன்ற சிலர் மேல் ஏறினாலும் கீழ்நோக்கிப் பார்த்து அங்கிருப்பவர்களை கைகொடுத்து மேலேற்றி வருகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களால் சமூக மாற்றம் ஏற்படாதா என்ன..?
 
 
 
திருச்சியில், வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் பயிலும் பள்ளியை நிர்வகித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண் ஸ்வேதா! Clap Icon0 claps +0 Clap Icon [Bookmark this story] நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரிடமும் சொல்வதற்கு அசாத்தியமான கதைகள் இருக்கின்றன. அந்த கதைகளை நாம் கேட்க ஒரு அற்புதமான சூழலை திடீரென பிரபஞ்சம் உருவாக்கிக் கொடுக்கும். அப்படி, பலமாக காற்றடித்துக் கொண்டிருந்த ஒரு கோடை இரவில் நானும் ஸ்வேதாவும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தோம். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான ஸ்வேதா அச்சமூகம் சந்திக்கும் சமகால பிரச்சினைகள் பற்றியும் பெரும்பாலும் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளியை நடத்துவது பற்றியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியதை அப்படியே எழுதி விட முடியாது என்றாலும் அதன் சாரத்தை சிதைக்காமல் எழுத முயற்சிக்கிறேன். உங்க சொந்த ஊர் எது? உங்க அப்பா அம்மா பத்தி சொல்லுங்க..? பட உதவி: விகடன் பட உதவி: விகடன் “திருச்சியில இருக்க தேவராயன் ஏரி கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். அப்பா மகேந்திரன் பனிரெண்டாவது வரை படிச்சிருக்காரு. குழந்தை திருமணங்கள் பற்றிய விழிப்புணர்வோ, அதுக்கு எதிராக இயங்கணும்ணு எண்ணமோ இல்லாத அந்தக் காலத்தில் என் அம்மா சீதாவுக்கு பதினஞ்சு வயசு இருக்கும் போது கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க, கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவ படிக்க வெச்சிருக்காங்க. அப்படி அம்மா பத்தாவது படிச்சிட்டு இருந்தப்போ கர்ப்பம் ஆயிட்டாங்க. நான் பிறந்தேன். அதன் பிறகு அம்மாவால பத்தாம் வகுப்பு கூட முடிக்கமுடியல்ல. 1980-ல் திருவள்ளுவர் குருகுல ஆரம்ப பள்ளி-னு எலிமெண்டரி பிரைவேட் ஸ்கூல் ஒண்ணு நடத்திட்டு இருந்த ஹெ.எம் அப்பாவ கூப்பிட்டு, ஒரு ஹாஸ்டல் தொடங்குங்க, நெறைய எம்.பி.சி கிராண்ட்ஸ் எல்லாம் இருக்கு. அதை வெச்சு பிள்ளைங்களுக்கு சாப்பாடு போடலாம்னு சொன்னாரு. அப்பா ஐ.ஏ.எஸ். ஆஃபிசர் ஆர்.எஸ்.மலையப்பன் பேருல ஹாஸ்டலும், நரிக்குறவர் எஜுகேஷன் வெல்ஃபேர் சொசைட்டின்னு ஒரு அரசு சாரா அமைப்பும் ஆரம்பிச்சாரு. ஹாஸ்டல் தொடங்குனதால நிறைய மாவட்டங்கள்ல இருந்து குழந்தைகள் வந்து தங்கி படிச்சாங்க. மாணவர்களோட எண்ணிக்கையும் அதிகமாச்சு, ஹாஸ்டல் குறிப்பா ஆறாவதுல இருந்து எட்டாவது வரை படிக்குற மாணவர்களுக்காகத் தான்... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அந்த ஸ்கூலை நடத்திட்டு இருந்தவங்களால அதை மெயிண்டெயின் பண்ண முடியாம போனதால, ஸ்கூலை நடத்துற பொறுப்பும் எங்களுக்கு வந்துச்சு. என்ன படிச்சீங்க? உங்களோட விருப்பம் என்ன? வழக்கமா எங்க ஊர்ல ஒரு பொண்ணு நல்லா வளர்ந்துட்டாலோ, பருவ வயசுக்கு வந்துட்டாலோ அவங்களுக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிடுவாங்க. அப்படி எல்லாம் என்னைப் பார்த்து யாரும் சொல்லிடக் கூடாதுன்னு அப்பாவும் அம்மாவும் இங்க இருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கற ஸ்கூல்ல என்னை சேர்த்தாங்க. அங்க தங்கியிருந்து நான் பிளஸ் டூ வரை படிச்சேன். ஆனா, மறுபடியும் கல்யாணம் பத்தி எல்லாரும் பேசத் தொடங்குனதும், ‘இல்ல எம் பொண்ணு படிக்கணும்’னு என்னை எஞ்சினியரிங் படிக்க வெச்சாங்க. படிச்சு முடிச்சப்போ அப்பாதான் பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்தாரு. அவரை பார்த்துதான் இதே துறைல இறங்கினேன். அப்பா செய்யுற வேலைகளை எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டேன், அவங்களுக்கு உதவியா இருந்தேன், தொழில்நுட்ப வேலை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிட்டேன். நரிக்குறவர் சமூகத்தில படிச்சவங்களோட விகிதம் அதிகம் ஆகியிருக்கிறது உண்மை. நரிக்குறவர் சமூகம் இப்போ மிகவும் பின் தங்கிய சாதி பட்டியல்ல இருக்கு, அதை பழங்குடியினரா மாத்தணும்னு 2015-ல டில்லிக்கு போய் போராட்டம் பண்ணோம். ஒரு மசோதா இப்போ நிலுவையில இருக்கு, அது நகர்ந்தா எதாவது நல்லது நடக்கலாம். இப்படி போயிட்டு இருந்தப்போ 2017-ல அப்பா சிறுநீரக பிரச்சினையால இறந்துட்டாரு. அப்பா இறந்தது நாங்க நடத்தின அந்த ஸ்கூல்ல வைச்சிதான், அதெல்லாம் ரொம்ப உணர்வு பூர்வமான கதை. இந்த ஸ்கூல்ல தங்கி படிக்குற குழந்தைகளோட பொருளாதார பின்புலம் எப்படி இருக்கும்? image அப்பா நல்லாயிருந்த வரைக்கும் ஹாஸ்டல்-ல இருநூறு குழந்தைங்க தங்கி படிச்சாங்க. இப்போ, நிதி உதவி இல்லாததால ஹாஸ்டல் நடக்கல. ஸ்கூல்ல படிக்குற குழந்தைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கவங்க தான். எல்லாருமே ஒடுக்கப்பட்டோராக தான் இருப்பாங்க. பெரும்பாலும் தலித்கள், நரிக்குறவர்கள் தான் படிக்குறாங்க. ஸ்கூலை நடத்துறதுல என்ன மாதிரியான சிக்கல்களை எல்லாம் சந்திச்சீங்க? அப்பா இறந்த பிறகு ஸ்கூலை நிர்வாகிக்கிற பொறுப்பு எனக்கு வந்துச்சு. சட்டப்பூர்வமாகவே நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. நிறைய அதிகாரிகளே எங்களுக்கு எதிரா இருப்பாங்க. நரிக்குறவர் சமூகத்தில் இருக்குற குழந்தைகள படிக்க வைக்கும் போது நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மொதல்ல, இவங்கள எல்லாம் மிரட்டி தான் படிக்க வைக்கணும். நரிக்குறவர்கள் ஊர் விட்டு ஊர் போயிட்டே இருக்கும் ஜிப்ஸிக்கள். அவங்க ஒரு இடத்தில தொடர்ந்து தங்கியிருக்கணும்னா அவங்களுக்கு ஒரு வீடு கொடுக்கணும், வருமானத்திற்கு ஒரு வழி உண்டாக்கி கொடுக்கனும். என்.ஜி.ஓ ஒண்ணு தொடங்குனதா சொல்லியிருந்தேன் இல்லையா? அந்த அமைப்பு வழியா இவங்களுக்கான தொழில், உரிமைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக சில வேலைகள் செய்திட்டு இருந்தாரு அப்பா. கைவினை பொருட்கள் எல்லாம் செய்றவங்களை அரசு கலை கண்காட்சிகளில் பங்கெடுக்க வச்சாரு. இதை ரொம்ப உபயோகமான விஷயமா அப்பா செஞ்சிட்டு இருந்தாரு. ஆனாலும், மார்ச் ஏப்ரல் மாசங்கள்ல நிறைய கோவில்களில் திருவிழாக்கள் நடக்குறதால, மார்ச் மாசம் குழந்தைய கூட்டிட்டி கெளம்பிடுவாங்க. அப்புறம், திருவிழா எல்லாம் முடிஞ்சு நாலு மாசம் கழிச்சு தான் வருவாங்க. அப்போ அந்த கொழந்த மறுபடியும் அதே கிளாஸ்ல படிக்கும். என்ன தான் பேசினாலும் இந்த இடம் பெயர்தலை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாது. இன்னும் நாடோடித் தன்மையை நரிக்குறவர்கள் இழக்காமல் இருப்பதும், நிரந்தரமான தொழில் வருவாய் இல்லாம இருக்குறதும் நடைமுறைல சில பிரச்சனைகளை உருவாக்குது. எப்பவுமே, நாங்க சந்திக்குற பெரிய சவால், பாகுபாடு தான். இப்போ ஸ்கூலுக்கு போற குழந்தைங்க கூட சாதிப் பெயரால தீண்டாமைக்கு ஆளாகுறாங்க. இன்னும் இருநூறு முன்னூறு வருஷம் ஆனாலும், இந்த நிலைமை மாறுமாங்கிறது சந்தேகம் தான். உங்களுக்கு இப்போ எவ்வளவு நிதியுதவி தேவைப்படும்? மத்திய அரசோட அனைவருக்கும் கல்வி திட்டத்தால ஹாஸ்டல்ல தங்கியிருக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அறுநூத்தி அம்பது ரூபாய் அரசு கொடுக்கும். ஆனா, அந்த குழந்தையோட பராமரிப்புக்கு இதை விட இரட்டிப்பு தொகை செலவாகும். அதை சமாளிக்கத் தான் நிறைய கண்காட்சி எல்லாம் நடத்துவோம். இப்போ அம்மாவுக்கும் வயசாச்சு, அவங்களால இயங்க முடியலேன்னா கஷ்டம் தான். அரசிடம் இருந்து மாசத்திற்கு அறுபதாயிரம் வருது, கூடவே இன்னொரு அறுபதாயிரம் கிடைச்ச ரொம்ப சிறப்பா ஹாஸ்டலை நடத்தலாம். நல்ல தரமான, ஆரோக்கியமான உணவு கொடுக்கலாம். எந்த குறையும் இல்லாம பார்த்துகலாம். இப்போ சம்மர் கேம்ப் வச்சு, குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம்னு சொல்லித் தர ஒரு யோசனை இருக்கு. இப்போ கூட கல்வி இரண்டாம் பட்சம் தான். மொதல்ல குழந்தைகளுக்கு பாதுகாப்பும், உணவும் கிடைக்குது. ஒரு மோசமான வாழ்க்கை முறையில இருந்து தப்பிக்குறாங்க. சமீபத்துல ஒரு வெப்சைட்டில இருந்து கூப்பிட்டப்போ, எங்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிறைய பாலியல் சீண்டல்களை, தொந்தரவுகளை அனுபவிக்குறதை பத்தி பேசியிருந்தேன். ஆனா, அதுக்கு ஒருத்தங்க மறுப்பு தெரிவிச்சு பேசியிருந்தாங்க. இதை எப்படி புரிஞ்சுக்குறது..? நரிக்குறவர்கள் பொது இடங்கள்ல தங்குவாங்க, தூங்குவாங்க. அவங்க பக்கத்துலயே நிறைய ஆபத்தான ஆட்களால் தொந்தரவு இருந்துக்கிட்டே இருக்கும். இப்படி மற்ற சமூகங்கள விட எங்களுக்கு தான் நிறைய அச்சுறுத்தல்கள் இருக்கு. கூடவே, தென்னிந்திய பெண்களை விட மாறுபட்டு இருக்கு எங்களுடைய உடலமைப்பு இது எங்கள் மீது பொதுச் சமூகம் குறி வைக்க பிரதான காரணமாக இருக்கு. image நிறைய சந்தர்ப்பங்களில் நான் சீண்டலுக்கு ஆளான அனுபவம் இருக்கு. எங்களுடையது ரொம்ப கட்டுக்கோப்பான சமூகம். இதை பத்தி வீட்டுல சொன்னா, அடுத்து மற்ற பெண் பிள்ளைகளை படிக்க விட மாட்டாங்க. இப்படியான சூழல் தான் இந்த ஸ்கூல் நடத்துறத சவாலான விஷயமா மாத்துது. நரிக்குறவர் சமூகத்தின் முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஸ்வேதா, பட்டம் முடித்ததும் கேம்பஸ் இன்டர்வியூவில் சண்டிகர் மாநிலத்தில் வேலை கிடைத்தும், அந்த வேலைக்குச் செல்லாமல் தன் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக பள்ளியை நடத்தி, இன்னல்களுக்கு இடையே வழிகாட்டி வருவது போற்றத்தக்க ஒன்று

Read more at: https://yourstory.com/tamil/54ecd1b8d7-swetha-to-change-the-l

கருத்துகள் இல்லை: