செவ்வாய், 6 அக்டோபர், 2020

சின்டெக்ஸ் தொட்டி ஃபிராடு ! மறைக்கும் ஊடகங்கள்! இன்று 6000 கோடி கடனுடன் fraud

RS Prabhu  :எத்தனையோ பிம்பங்கள் மிகக் கவனமாக கட்டமைக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள்,

"மாற்று" நிபுணர்கள், நேர்மையான ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என பலரது campaign-கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு யாருக்கும் ஐயமே ஏற்படாத அளவுக்கு தூக்கி நிறுத்துப்படுகின்றன. அத்தகைய பிரச்சார உத்தியில், MBA போன்ற மேலாண்மைப் படிப்புகளும் மிக முக்கியமான ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டன. எம்பிஏ படித்தவர்களை வேலைக்கு எடுக்காவிட்டால் சந்தையில் போட்டி போட முடியாமல் அந்த நிறுவனம் இரத்தம் கக்கிச் சாகும் என்று சொல்லாததுதான் பாக்கி.
எங்கெங்கு திரும்பினும் மேலாண்மைக் கல்லூரிகள் வந்தன. எம்பிஏ-க்கள் நிறுவனங்களின் முக்கிய இடங்களைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தனர். பொருட்களின் தரம், விலை, சந்தையில் உள்ள வியாபாரிகளும் பொருளை வாங்கும் வாடிக்கையாளர்களும் சிந்திக்கக்கூடிய மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு உத்திகள் வகுக்கத் தொடங்கினர். பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதைவிட பவர்பாய்ன்ட் வில்லைகளில் பல்வேறு வார்த்தைகளைப் போட்டு உருட்டும் கலை மட்டுமே வளர்ந்தது. sintex-industries fraud link
மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டன. ஐஐஎம், ஐஐடி ஆட்களை வைத்துக்கொண்டு பிடுங்குவது எல்லாம் தேவையில்லாத ஆணி என்று உணர்ந்து அத்தகைய ஆட்களை கட்டம் கட்டி வெளியேற்றிய சம்பவங்கள் சத்தமே இல்லாமல் நடந்தது.
ராஷ்மி பன்சல் அம்மையார் IIM அகமதாபாத்தில் படித்தவர். ஐஐஎம்-களில் படித்து தொழில் நிறுவனங்களை நிறுவிய 30 பேரைப் பேட்டி கண்டு Stay Hungry Stay Foolish என்கிற புத்தகத்தை எழுதினார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த சுபிக்‌ஷா என்ற சூப்பர் மார்க்கெட் பல ஆண்டுகளுக்கு முன்னரே திவாலானது. வங்கிக் கடன் வாராக்கடனாக எழுதப்பட்டது.
வீடுகளின் மேல் வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகளை சின்டெக்ஸ் தொட்டி என்று அழைக்குமளவுக்கு ஏகபோக விற்பனையை வைத்திருந்தது சின்டெக்ஸ் நிறுவனம். இன்று 6000 கோடி கடனுடன் fraud என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஐஎம் பட்டதாரியால் நிறுவப்பட்ட சின்டெக்சில் நிர்வாக புள்ளிகள் அனைவரும் குஜராத்திகள் என்பதும் இதன் தாய் நிறுவனம் 1931-இல் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடன் வழங்கிய அனைத்துமே பொதுத்துறை வங்கிகள். பஞ்சாப் நேஷனல் வங்கி மிகப்பெரிய கடன்தாரர். ஒரு வாராக்கடனை fraud என்று அறிவித்தால் அதை மொத்தமாக கணக்கிலிருந்து வழித்து எடுத்துவிட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி விதிமுறை.
எந்த ஒரு அச்சு ஊடகங்களிலும் சின்டெக்ஸ் ஃபிராடு குறித்து வரவில்லை. இணையதளங்களில் மட்டுமே செய்தியாக இருக்கிறது. தமிழ் ஊடகங்கள் இதை கவனமாகத் தவிர்த்துள்ளனர்.
சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தண்ணீர் தொட்டிகளைத் தயாரித்து விற்கத் தொடங்கியதால் போட்டியை சமாளிக்க முடியாமல் திவாலாவது வேறு. ஆனால் சின்டெக்ஸ் நிறுவனம் changing industrial dynamics, மானியம் ஊக்கத்தொகை வழங்காதது, திட்டங்களை சரிவர முடிக்க முடியாமை போன்றவற்றைக் காரணமாக சொல்லியுள்ளது.
இருப்பினும் வங்கிகள் இதை வாராக்கடனாக மட்டுமல்லாது fraud என்று குறிப்பிட்டுள்ளதும், ஊடகங்கள் தொடர்ந்து அமைதி காப்பதும் பல்வேறு ஊகங்களுக்கு வழி விட்டுள்ளது.
சின்டெக்ஸ் ஃபிராடு குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றே தெரிகிறது.
ஐஐஎம் லக்னோ பட்டதாரி ஒருவர் தமிழ்நாட்டில் ஆட்டுக்குட்டி வளர்க்க வந்ததாக சொல்லி PR stunt செய்ததைப் பார்த்து ஆட்டுக்கறி விலை குறைய வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் நம்பியிருந்த சூழ்நிலையில் அவர் வேறு பக்கம் தாண்டிவிட்டார். தற்போது இன்னொரு ஐஐஎம் பட்டதாரியின் நிறுவனம் ஃபிராடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
RS Prabhu

கருத்துகள் இல்லை: