சனி, 10 அக்டோபர், 2020

செயில் வீரன்! ~ 91 வயதான செயவீரனுக்கு வீரவணக்கம் ... 1927. சென்னையில் நீலன் சிலை அகற்றும் போராட்டம்...

Karikalan R : · செயில் வீரன்! ~ நேற்றுமுன்தினம் 91 வயதான செயவீரன்

தமிழ்நாடு, இந்தியா, 24×7 செய்தி ஊடகங்கள் இவற்றின் கவனத்தை ஈர்க்காமல் 'பொசுக்' கென்று செத்துபோய்விட்டார். இதில் என்ன பெரிய அதிசம்? எனத் தோன்றலாம். ஒரு flashback! 1927. சென்னையில் நீலன் சிலை அகற்றும் போராட்டம். இந்த நீலனின் முழுப் பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல். ஏன் இவன் சிலையை அகற்ற வேண்டும்? முதல் சுதந்திரப்போர் என்று அழைக்கப்பட்ட சிப்பாய்க்கலகத்தை ஒடுக்க நீலன் தலையையில், சென்னையிலிருந்து ஒரு படை கொல்கொத்தாவை அடைந்தது. அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி அப்பாவி சிவிலியன்களையும் கூட்டம் கூட்டமாக கொன்றான் நீலன். மக்களை தனித்தனியாக தூக்கில் ஏற்றுவது சிரமம் என்பதால், கூட்டமாக நிறுத்தி, ஒரே கயிற்றால் அவர்கள் கழுத்தை முடிச்சிட்டு , அதை மரங்களில் மாட்டி யானைகளால் இழுக்கச் செய்து சாகடித்தான்.
அதுவும் நேரமாகிறது என்று, கூட்டமாக மனிதர்களை நிறுத்தி உயிரோடு தீயிட்டு கொளுத்தியவன்.
இந்த நீலன் சிலையைதான் சென்னையில் ஸ்பென்சர் அருகே, ஆங்கில அரசு நிறுவியது.
இந்த சிலையை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அஞ்சலை அம்மாள். இவர் கடலூர் முதுநகரில் வசித்தவர். இந்தப் போராட்டத்தில்
தன் ஒன்பது வயது மகள்
அம்மாக்கண்ணுவையும் ஈடுபடுத்தினார் அஞ்சலையம்மாள்.
தாய் மகள் இருவரும் சிறை சென்றனர். அஞ்சலை அம்மாளின் வீரமறிந்து, அவரை நேரில் சந்தித்தார் காந்தி . அம்மாக்கண்ணுவை லீலாவதி என பெயர் மாற்றி தன்னோடு வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்!
தன்னுடைய சொத்துக்களை விற்று காந்தியின் விடுதலை இயக்கத்துக்கு கொடையாகத் தந்தவர் அஞ்சலையம்மாள்.
ஒத்துழையாமை இயக்கம் , உப்புச் சத்தியாக்கிரகம் இப்படி எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டவருக்கு சிறை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையானது.
1932 இல் நிறைமாத கர்ப்பிணியாக சிறையில் இருந்தார் அஞ்சலை அம்மாள். பரோலில் வெளிவந்து ஓர் ஆண் மகவைப் பெற்றார். கைக்குழந்தொயோடு மீண்டும் செயிலுக்குப் போனார்.
சிறையில் பிறந்து சிறையில் வளர்ந்ததால் அந்தக் குழந்தை
'செயில் வீரன்' ஆனான்.
அடிமை பூமியில் செயில் வீரனாகப் பிறந்தவன், சுதந்திரமடைந்த நிலையில் செய வீரன் ஆனான்.
சொத்துக்களை விடுதலை இயக்கத்துக்கு அளித்து, தமிழகத்துக்கு மகன் செயில் வீரனை தந்து மறைந்தார் அஞ்சலை அம்மாள். அந்த செயில் வீரனுக்கு , ஆதரமில்லை என்று சொல்லி தியாகி பென்ஷன் தர மறுத்தது தமிழக அரசு.
எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர் எனும் கூச்சலில், ஒரு விடுதலை வீரன் சத்தம் இல்லாமல் மறைந்தான்.
செயல்வீரனை யாருடைய வீரவணக்கத்துக்காகவும், RIP என்கிற கண்ணீரற்ற அனுதாப சொல்லுக்காகவும் இங்கே பகிரவில்லை.
மக்களுக்கான வரலாறை அதிகாரம் ஒருபோதும் எழுதப்போவதில்லை. கிடைக்கின்ற சிறிய பொழுதில், சிறிய இடத்தில், சொல்லிவிட வேண்டும் என்கிற தவிப்பில்தான் இதையெல்லாம்
எழுத வேண்டியிருக்கிறது!

கருத்துகள் இல்லை: