புதன், 15 ஏப்ரல், 2020

பாஜகவின் வானதி சீனிவாசன் காலணி வைக்கும் இடத்தில் அம்பேத்கர் படத்தை வைத்து ..

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்,
அம்பேத்கரின் புகைப்படத்தை காலணிகளை வைக்கும் இடத்தில் வைத்து மரியாதை செலுத்தியதாக இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன. கோவையில் உள்ள அவரின் வீட்டு வாசலில், எடுக்கப்பட்ட பழைய படம் ஒன்றையும், நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட படத்தையும் ஒப்பிட்டு அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
வானதி சீனிவாசன் வீட்டில் எடுக்கப்பட்ட பழைய படம்.
பிபிசி தமிழிடம் இது குறித்து அவர் பேசுகையில், "அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி 100 பட்டியலின பெண்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று எனது வீட்டில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் வீட்டின் முகப்பு பகுதியில் நடத்தப்படுகிறது.

இலவச பொருட்கள் வழங்க துவங்குவதற்கு முன் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வீட்டு முகப்பிற்கு அருகே உள்ள அலமாரியில் அவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினோம். இதன் காணொளி மற்றும் புகைப்படங்கள் எனது சமூக வலைதளப் பக்கங்களிலும் உள்ளன.

காலணிகளை வைக்கும் இடத்தில் அம்பேத்கரின் படத்தை வைத்ததாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. காலணிகளை வைக்க எங்கள் வீட்டில் தனியாக இடமுள்ளது. பழைய படத்திலும் அந்த அலமாறியில் ஒரு காலணிகூட இருக்காது. அரசியல் நோக்கில் தவறான முறையில் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. அப்படி செய்பவர்கள் பட்டியலின பெண்களுக்கு இலவசமாக மளிகைப் பொருட்கள் வழங்கியது குறித்து பேசுவதில்லை. எனவே, இது அரசியல் ரீதியான பொய்யான குற்றச்சாட்டு," என தன் மீதான விமர்சனங்களை மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: