செவ்வாய், 14 ஏப்ரல், 2020

இஸ்லாமியர்களுக்கு எதிரான விஷப்பிரசாரம் . உண்மையை விட பொய் அதிகமாக பரவும்

சுமதி விஜயகுமார் ; ஒரு வார காலமாக ஒரு வித மனசோர்வு. எந்த மொழி
செய்தி ஒளிபரப்பை பார்த்தாலும் corona பற்றியதாக மட்டுமே இருப்பதால் செய்தி பார்ப்பதிலும் ஒரு வித சலிப்பு. அதனால் வெறும் திரைப்படங்களிலும் புத்தகம் படிப்பதிலும் நேரம் செலவானது. அவ்வப்போது மட்டும் செய்தி பார்த்ததில் ஒன்று மட்டும் புலப்பட்டது. காரோணவை உலகம் கையாளுவது வேறு இந்தியா கையாளும் விதம் வேறு.உலகமே ஒற்றை அணியில் நின்று கொரோனவை எதிர்த்து கொண்டிருக்க, இந்தியா மட்டும் தன் சகோதரர்களில் ஒரு பிரிவினரை மட்டும் தள்ளி வைத்து அவர்கள் மேல் பழியை போட்டுக் கொண்டிருக்கிறது.
2000 ஆம் ஆண்டாக இருக்கலாம். என்னுடைய சீனியர் ஒருவர், நெருங்கிய நண்பரும் கூட என்னிடம் சொன்னது இன்னும் நினைவில் உள்ளது. திருச்சியில் அவர் வாழும் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். 'முஸ்லிம்ஸ் எல்லாம் அவங்க majority ஆகணும்னு நிறைய குழந்தைகளை பெத்துக்குவாங்கமா' என்றார். 'அப்படியா' என்று வாய் கேட்டது.'அதனால் என்ன என்று மனது நினைத்தது. அன்றோ இல்லை அதற்கு முன்பிருந்தோ முன்பிருந்தோ போடப்பட்ட அந்த விஷ விதை இன்று செடியாய் இல்லை மரமாகவே வளர்ந்து விட்டது என்பது தான் உண்மை.

இப்படி அப்படி என்றெல்லாம் இல்லை, தோன்றிய கதைகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள். வீட்டில் சித்தப்பா கூட இந்த தரம் கொரோனாவிற்கு பயந்து இஸ்லாமியர் கடையில் வாங்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ரம்ஜானுக்கு எங்கள் வீட்டிற்கு பிரியாணி வந்துவிடும். சித்தப்பாவின் நண்பர் மூலம். அந்த சித்தப்பா தான் இப்போது இஸ்லாமியர் கடையை தவிர்த்திருக்கிறார். எனக்கு தெரிந்து corona வைரஸ் இஸ்லாமியர்களால் தான் பரப்பப்படுகிறது என்கிற எண்ணம் பொது மக்களிடம் பரவலாய் பதிந்திருக்கிறதாகத்தான் தோன்றுகிறது.
ஏறக்குறைய 200 ஆண்டுகளாய் ஆண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்துதான் இந்தியா விடுதலை பெற துடித்ததேயன்றி , அதற்கு முன்பு ஒரு 300 ஆண்டுகள் ஆண்ட முகலாயர்கள் காலத்தில் ஏன் தோன்றவில்லை? ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்த செல்வத்திற்காகத்தான் நம்மை அடிமை படுத்தினார்கள் என்பது திண்ணம். அப்படி என்றால் முகலாயர்கள் ஆட்சியில் இந்தியா என்று சொல்லப்படும் பல்வேறு சமஸ்தானங்களும் ராஜ்யங்களும் செழிப்பாகத்தானே இருந்திருக்க வேண்டும். ஆங்கிலேயே ஆட்சியில் தூண்டிவிடப்பட்ட இந்து முஸ்லீம் பிரிவினை நன்றாக வேலை செய்வதை நன்றாக புரிந்த கொண்ட அன்றைய rss - bjp தங்கள் அடிப்படை களமாய் அதை அமைத்து கொள்ள மேற்கே தூவப்பட்டு வளர்க்க பட்ட அந்த விஷ மரம் இன்று தமிழ்நாட்டிலும் வளர்க்க படுகிறது.
எத்தனை கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் எத்தனை எதிர் கேள்விகள் வைத்து வாதிட்டாலும் மீண்டும் ஆரம்ப இடத்திற்கே வந்துவிடுகிறது விவாதம். இடஒதுக்கீடும் , கல்வியும் நம் கையை விட்டு போய் கொண்டிருக்க, மாநில சுயாட்சியை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்க, சமூக செயல்பாட்டாளர்களின் கைது தொடர்கதையாய் நிகழ்ந்து கொண்டிருக்க , மக்களின் கவனம் அனைத்தும் இஸ்லாமியர்களின் பக்கம் திருப்பப்பட்டிருப்பது என்பது அவர்களின் கடின உழைப்பையும் சரியான திட்டமிடலையும் சொல்கிறது.
விதைகளை தூவும் போதே தடுக்காமல் , விதை எழுந்து மரமாய் நிற்கும் பொழுது தடுப்பதென்பது மிக சிரமமான காரியம். வாயை திறந்தால் பொய், எழுதும் தீர்ப்பு சார்புள்ளது, தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் பெரு முதலாளிகளுக்கு என்று இத்தனை ஆதாரங்கள் இருந்தும், அந்த ஆதாரங்களை பரவலாக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் அறியப்பட வேண்டும். உண்மையை விட பொய் அதிகமாக பரவும் என்றாலும் , இன்று உண்மைகள் அனைத்தும் இடதுசாரிகளிடம் மட்டும் தேங்கி போய்விட்டது.
ஒரே வட்டத்திற்குள் மட்டும் விவாதம் செய்யாமல் , விவாதிக்கிறோம் என்பதே தெரியாமல் பொது மக்களிடம் உரையாடிக்கொண்டே இருப்பது தான் ஒரே வழியாய் தெரிகிறது. பிஜேபி ஆதரவாளரிடம் போய் 'நீங்க அப்டி நீங்க இப்டி' என்று சொல்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்களிடம் விவாதம் பண்ணும் வேளையில் அதையே ஒரு சாமானியனின் காதில் போட்டாலாவது கொஞ்சம் பயன் இருக்கும்.
இந்தியா ஒரு பெரும் இன அழிப்பிற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் வேறு அனைத்தையும் விட அதிகமாய் இருக்கிறது

கருத்துகள் இல்லை: