செவ்வாய், 14 ஏப்ரல், 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம்... இந்தியா இன்னும் கண்டுகொள்ளாத விடயம்

சிறப்புச் செய்தி: ‘அனைவருக்குமான அடிப்படை வருமானம்’ - காலத்தின் கட்டாயமா? ரகுநாத்
 மின்னம்பலம் :  மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை உரிமைகள் (Rights) உள்ளன. மேலும், ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாசனமும் அந்நாட்டுக் குடிமக்களுக்குச் சில உரிமைகளை வழங்கும்; அந்நாட்டுக் குடியாக இருந்தால் மட்டுமே அந்த உரிமைகளை அனுபவிக்க முடியும். ஒருவருடைய சுதந்திரங்கள், ஆற்றல்கள், செயல்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் கருவிகளாக இந்த உரிமைகள் இருக்க வேண்டும்.
‘கருத்துரிமை, விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான உரிமை, தனக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் உரிமை என்பதுபோல், வேலை செய்யும் உரிமையும் (Right to Work) வழங்கப்பட வேண்டுமா?’ எனும் கேள்வியும், அதையொட்டிய விவாதங்களும் பல காலமாகவே இருந்து வந்துள்ளன. 1930களின் Great Depression எனப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சி காலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் வேலையின்மை 25 விழுக்காடு வரை அதிகரித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின், அனைவருக்கும் வேலை வழங்குவதைப் பல நாடுகள் முக்கியக் குறிக்கோளாகக்கொண்டு பொருளாதார செயல் திட்டங்களை வடிவமைத்தன. மேலும் சில நாடுகளில் வேலை என்பது குடிமக்களின் உரிமை என்று சட்டமாக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பல ஐரோப்பிய நாடுகள் மக்கள் - நலன் சார்ந்த அரசை உருவாக்கி, செல்வந்தர்களிடம் இருந்து அதிக வரி வசூலித்து, அனைவருக்குமான கல்வி, சுகாதாரம், வேலையிழந்தவர்களுக்கு உதவித் தொகை, ஓய்வூதியம் எனச் சமூகப் பாதுகாப்பின் அடித்தளத்தை விரிவுபடுத்தி, வலுப்படுத்தின.

ஆனால் இன்று வேலை, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு இவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பு தளர்ந்துகொண்டே வருகிறது. சந்தைப் பொருளாதாரத்தில் பங்குபெற்று, அது வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால், சமுதாயத்தில் ஆரம்ப நிலையில் சமத்துவம் நிலவுவது அவசியம். அது நடக்காமல் போனால், சமூகத்தில் பலர், வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் பின்தங்கி விடுவர்.
அரசு தன்னுடைய செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; தனியார் துறையை சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும்; செல்வந்தர்கள் மீது அதிக வரி போட்டால் அவர்களுக்கு முதலீடு செய்வதற்கான ஊக்கம் போய்விடும் எனும் கோட்பாடுகளை தாராளவாத அறிவுஜீவிகள் முன்மொழிய, கடந்த முப்பதாண்டுகளாக அரசுகள் அதன்படியே நடந்ததன் விளைவாகவே உலகெங்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இதுவரை எவரும் கண்டிராத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
அதை மட்டுப்படுத்தவும், பரந்துபட்ட மக்கள் சந்தைப் பொருளாதாரத்தால் பயன்பெறவும் Universal Basic Income (UBI) எனப்படும் அனைவருக்குமான அடிப்படை வருமானம் பயனுள்ள கருவியாக இருக்கும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் குடிகள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, வேலையின்மையோ அல்லது வறுமையோ தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் ஒரு மக்கள்நல அரசு அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் நேரடியாகக் கொடுப்பதே இதன் நோக்கம்.
இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை 2016-17 இதைப்பற்றி விரிவாக விவாதித்தது. அதன் பிறகு இந்தியாவில் அனைவருக்குமான அடிப்படை வருமானம் பற்றிய விவாதம் சூடுபிடித்தது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்காமல், 75 விழுக்காடு மக்களுக்கு மட்டும் அடிப்படை வருமானம் வழங்க தேவைப்படும் தொகை, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) கிட்டதட்ட 5 விழுக்காடாக இருக்கும் என்றது ஆய்வறிக்கை. அடிப்படை வருமானமாக வழங்கப்பட வேண்டிய தொகையைத் தீர்மானிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதையும் அது அங்கீகரித்தது.
2016-17 நிதியாண்டில் ஒன்றிய அரசின் மொத்த செலவில் சமூகநலத் திட்டங்களுக்குச் செய்த செலவின் பங்கு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 5 விழுக்காடு. இது இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்பியது: அனைவருக்குமான அடிப்படை வருமானத்தைச் செயல்படுத்த எங்கிருந்து வளங்களைத் திரட்ட வேண்டும்? நலத்திட்டங்கள், மானியங்களை வெட்டிதான் இதனை செயல்படுத்த முடியுமா?
இதற்கு பொருளாதார வல்லுநர்கள் சில தீர்வுகளை முன்வைத்துள்ளனர். வசதி படைத்தவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை ஓரளவுக்கு வெட்டினால் ஏற்படும் சேமிப்புகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் சலுகைகள், வரி விலக்குகளைக் குறைப்பதனால் கிடைக்கும் வளங்களைக் கொண்டு சிறப்பான முறையில் அனைவரும் பயன்பெறும்படி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். செல்வந்தர்கள் மீது Wealth Tax போன்ற நேர்முக வரிகள் போட்டு இத்திட்டத்துக்குத் தேவையான நிதி திரட்டுவதால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் குறைவதற்கான வாய்ப்புள்ளது.
அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை நாட்டு மக்களின் உரிமையாக்கி, அவர்களுடைய வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நேரம் கனிந்துவிட்டது என்று பல பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு புரட்சிகரமான கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டபோதெல்லாம், அது பல தரப்பினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது என்பது வரலாறு. எந்தவொரு புதிய, புரட்சிகரமான சமூக - பொருளாதாரக் கொள்கைக்கும் முதலில் மூன்று வகையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படும் என்று அரசியல் பொருளாதார மேதை ஆல்பர்ட் ஹிர்ஷ்மன் The Rhetoric of Reaction எனும் புத்தகத்தில் எழுதியிருப்பார். (அ) இது நடைமுறைக்கு ஒத்துவராது, (ஆ) இது பல எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும், (இ) இது மற்ற இலக்குகளை அடைவதைக் கடினமாக்கிவிடும் என்பவையே அவை.
அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை எடுத்துக்கொண்டால், எந்தவொரு நாடும் இதுபோன்ற முயற்சியில் இதுவரை ஈடுபட்டதே இல்லை எனும் வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இன்று நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள அனைத்து மக்கள்நலத் திட்டங்களுக்கும் இந்த வாதம் பொருந்துமே! இந்தக் கருத்தாக்கத்க்ச் சாத்தியமாக்குவதற்கான தொழில்நுட்ப, அமைப்பு ரீதியான கட்டமைப்பை இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் உருவாக்குவது இன்றைய காலத்தில் பெரிய சவாலாக இருக்காது.
ஒரு பொருளாதார நெருக்கடியின்போது வேலையையும், வருமானத்தையும் இழக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள், எவ்வளவு எளிதில் பாதிக்கப்படக்கூடிய அவலநிலையில் இருக்கின்றனர் என்பதை கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் நமக்கு உணர்த்தியுள்ளன.
1930களில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க நாட்டு மக்களின் சமூகப் பாதுகாப்புக்கான அடித்தளம் போடப்பட்டது; இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பாவில் பல மக்கள் நல அரசுகள் மலர்ந்தன. இந்தியாவில் அதுபோன்ற முற்போக்கான மாற்றத்தை முடுக்கிவிடுமா இந்த கொரோனா நெருக்கடி? அது அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை நோக்கிய பயணமாக இருக்குமா?

கருத்துகள் இல்லை: