செவ்வாய், 14 ஏப்ரல், 2020

பிரதமரிடம் இருந்து அறிவுரை வேண்டாம், நிவாரணம் வேண்டும்: ஸ்டாலின்

அறிவுரை வேண்டாம், நிவாரணம் வேண்டும்: ஸ்டாலின்மின்னம்பலம் : நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 14) காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஊரடங்கை மே 3ஆம் நாள் வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பிரதமரின் உரை அமைந்தது. மக்களுக்கு பல அறிவுரைகளையும் மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நாட்டு மக்கள் பிரதமரிடம் இருந்து எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல, மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள், பொருள் உதவிகள், பண உதவிகள்தான். அத்தகைய எந்த அறிவிப்பும் பிரதமர் இதுவரை ஆற்றிய உரைகளிலும் இல்லை; இன்றைய உரையிலும் இல்லை” என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து தங்களை மக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். அத்தகைய மக்களை, பொருளாதார ரீதியாகப் பாதுகாக்க மத்திய அரசு தனது திட்டங்களை உரிய காலத்தில் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்,
“இந்தியச் சமூகத்தில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர், அன்றாட வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களது வாழ்க்கை, இந்த ஊரடங்கால், மொத்தமாகச் சிதைந்துவிட்டதே, அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியப் பிரதமர் செய்யப் போகும் உதவிகள் என்ன? அத்தகைய லட்சோபலட்சம் இந்தியக் குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டினுடைய, நாட்டு மக்களுடைய பணம், நம்முடைய பணம்; இந்த 30 லட்சம் கோடியில் ரூ.65 ஆயிரம் கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தரமாட்டாரா?" என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம், 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா? என்றும் கேட்டுள்ள ஸ்டாலின்,
“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் மருந்துகள், அவர்களைக் காக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயைக் கண்டறியும் கருவிகள், இவற்றை மாநிலங்களுக்கு எப்போதுதான் தரப்போகிறீர்கள் என்பதே, இப்போது மக்கள் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள், உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்பும் பதில்கள்!மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என்பதுதான் நான் இன்று முன்வைக்க விரும்பும் கேள்வியாகும்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: