திங்கள், 13 ஏப்ரல், 2020

மேம்பாலங்களுக்கு கீழே.. சாலை ஓரங்களில்.... குடிசைகளில் இனி பட்டினியில் சாக வேண்டியது தானா…?

சாவித்திரி கண்ணன் : பேரதிர்ச்சியாக இருக்கிறது…!
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக தனியார்களோ, அமைப்புகளோ நிவாரணப் பொருட்கள் வழங்க கூடாதாம்!
தமிழக அரசு அறிவித்துள்ளது! எல்லோரும் காசையும்,பொருளையும் அரசுக்கு கொடுத்துட்டு,சும்மா கையக்கட்டிக் கெடக்கணுமாம்!
இப்பவும் உணவின்றி லட்சோபலட்சம் மக்கள் ரோட்டோரங்களில் எங்கெங்கும் சுருண்டு படுத்திருக்கிறார்கள்…!இதை களப்பணியில் உள்ள அனைத்து நிருபர்களும் அறிவார்கள்,காவல்துறையும் அறியும்!
இவர்கள் இது நாள் வரை அரைகுறை வயிற்றுடனாவது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தனிப்பட்ட பலரின் மனிதநேயமே காரணம்!
இன்னும் பிளாட்பாரங்களில், சாலை மேம்பாலங்கள் அடியில்,எம்.ஆர்.டி ரயில்வே மேம்பாலம் அடியில், ஓலைகுடிசைகளில், ஓட்டுவீடுகளில், குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகளில் வேலையிழந்தவர்களாக வாழும் கோடானுகோடி எளியமக்கள், இனி பட்டினியில் சாக வேண்டியது தானா…?

இங்கே, மனித நேயம் உள்ளவர்கள் இருப்பதால் தான் இது வரை லட்சோபலட்சம் பட்டனிச்சாவுகள் தடுக்கப்பட்டுள்ளன!
அவரவர் வீட்டு அருகாமையில் அல்லது ஏரியாவில் கவனத்திற்கு வரும் பசியில் துடிக்கும் குடும்பத்தை காப்பாற்ற அரசு என்ன தடைவிதிப்பது..?
இப்படிப்பட்ட கொடிய அறிவிப்பை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட அடிமை இந்தியாவில் பஞ்சம் வந்த காலங்களில் கூடச் சொன்னது இல்லை!
உலகில் எந்த நாடுமே இப்படி அறிவிக்கவில்லை!
தனி நபர்கள்,குழுக்கள்,தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள்,அனைத்துவிதமான தொழிற்சங்கங்கள்,சாதி அல்லது மத அமைப்புகள் ஏன் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கூட மகத்தான அளவில் பசியுள்ளோரைத் தேடிச் சென்று உணவோ அல்லது உணவுக்கான பொருள்களோ நாளும், நாளும் வழங்கி வந்துகொண்டிருப்பதால் தான் ஏதோ சிலர் பசியாறி,உயிர்பிழைத்து வருகின்றனர்.
வள்ளலாரும்,புத்தரும்,மகாவீரரும்,இன்னும் பல ஆன்மீக ஞானிகளும்,’’தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழிப்போம்’’என்று சொன்ன பாரதியும் பிறந்த மண்ணில், ’’பசித்தவனுக்கு உணவிடாதே..மீறினால் நடவடிக்கை தான்’’ என்று சொல்லும் அரசாங்க ஆணை மதிக்கப்படாது.
மாறாக,’’கவனமாக,தகுந்த முககவசம், கைகிளவுஸ்,சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்புடன் தன்னார்வலர்கள் பணியாற்றுங்கள்….’’ என்று தொண்டு செய்பவர்கள் மீதான கரிசனம் வெளிப்பட்டால்..அது தான் மக்களுக்கான அரசாகும்!
இன்னும் சொல்வதென்றால்,அரசின் முயற்சிகளுக்கு தன்னார்வலர்களின் உழைப்பையும்,ஆதரவையும் ஒருங்கிணைத்து பெற்றுக் கொள்வதே ஒரு மக்கள்நல அரசின் செயலாக இருக்க முடியும்!
பேரழிவுகாலத்தைக் காரணமாக்கி ஆட்சியாளர்களும், அரசு அமைப்புகளும் மனித நேயத்தை குழிதோண்டி புதைத்து, சர்வாதிகாரத்தை கையிலெடுக்கும் முயற்சி,கொரானாவை விடக் கொடியது!
இதை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் குரலையும் நான் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான குரலாகத் தான் பார்க்கிறேன்!
ஒரே வார்த்தை; மக்களுக்காகத் தான் அரசாங்கம், அரசாங்கத்திற்காக மக்கள் கிடையாது

கருத்துகள் இல்லை: