திங்கள், 13 ஏப்ரல், 2020

மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க தனியாருக்கு தடை .. கொரோனாவை விட மோசமான எடப்பாடி மோடி கூட்டணி

nakkheeran.in - இரா. இளையசெல்வன் : ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம்
இழந்து தவிக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் நிவாரண உதவிகளுக்கு எடப்பாடி அரசு தடை
விதித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த தடை உத்தரவுக்கு பின்னணியில் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தேசிய ஊரடங்கை மத்திய அரசும், 144 தடை உத்தரவை எடப்பாடி அரசும் அமல்படுத்தியிருக்கின்றன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவர்களுக்கான அன்றாட அத்யாவசிய பொருட்களை தமிழக அரசியல்கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு பகுதிகளிலும் வழங்கி வருகின.
இந்த நிவாரண உதவிகளுக்குத்தான் தற்போது தடைவிதித்திருக்கும் எடப்பாடி அரசு, ’’ நிவாரண உதவிப் பொருட்களை வழங்கும் சேவையிலிருந்து அரசியல்கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் விலகிக்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் ‘’ என உத்தரவு பிறப்பித்துள்ளது.

           
இந்த தடை உத்தரவு, நிவாரண உதவி வழங்கி வரும் அரசியல் கட்சிகளிடத்திலும் மக்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய திமுக மா.செ.க்கள், ‘’ கரோனா வைரசை தடுப்பதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கிய கையோடு, தனது தூத்துக்குடி தொகுதிக்குள் களமிறங்கினார் திமுக எம்.பி. கனிமொழி. அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விசாரித்த அவர், டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் தேவையான கரோனா தடுப்பு கவசங்கள், சானிடைஷர்கள், கவச உடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் செய்தார்.
                 
இதனையடுத்து, பசியால் யாரும் உயிரிழந்து விடக்கூடாது என திட்டமிட்டு, தொகுதி முழுவதுமுள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கும், அமைப்புச்சார தொழிலாளர் குடும்பங்களுக்கும் தேவையான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கினார் கனிமொழி. இதற்காக, தொகுதிக்குள்ளே 7 நாட்கள் தங்கியிருந்தார். தொகுத்திக்குள்ளேயே தங்கியிருந்த கனிமொழியை தொடர்புகொண்ட அரசு டாக்டர்கள்,  தங்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் இல்லை என்பதையும், 100 ஆடைகள் கொடுத்து உதவ முடியுமா? என்றும் கோரிக்கை வைத்தனர். அவசரம் அவசரமாக  175 ஆடைகளை ஏற்பாடு செய்து உடனே அரசு மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்தார் கனிமொழி.
         
கனிமொழியின் வேகம், திமுகவில் சுறுசுறுப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் தொடங்கி திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் தங்களது மாவட்டத்திலும் தொகுதிக்குள்ளும் களமிறங்கினார்கள். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினர்.


                
திமுகவின் வேகம் கண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களமிறங்கின. ஆனால், ஆளும் கட்சியில் அமைச்சர்கள் சிலரைத் தவிர பெரும்பாலும் முடங்கியே கிடந்தனர். இதனால், நெருக்கடியான இந்த சூழலில் திமுகவின் பணிகள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றதுமல்லாமல், ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் உருவாக்கியது. இதனை ஜீரணிக்க முடியாமல்தான் நிவாரண உதவிகளுக்கு தடை விதித்திருக்கிறது எடப்பாடி அரசு. கூட்டம் சேர்க்காமல் சமூக இடைவெளியை பின்பற்றியும் ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டும்தான் நிவாரணம் வழங்கி வருகிறோம். மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துவிட்டு அரசாங்கமே எல்லாம் செய்து விடலாம் என நினைத்தால் அது முடியாது. அனைத்து தரப்பு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கத்தால் நிறைவேற்றிட முடியாதுங்கிறதுதான் எதார்த்தம்.
இன்றைக்கு பல ஆயிரம் மக்களுக்கு ரேசன் அட்டை கிடையாது. அவர்களுக்கு எப்படி அரசின் நிவாரண உதவி கிடைக்கும் ? அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அரசின் நிவாரண உதவி கொடுக்கப்படும் என எடப்பாடி அரசு அறிவிக்கிறது. ஆனால், சர்க்கரை அட்டைத்தாரர்களுக்கு நிவாரண உதவி இல்லை என பல மாவட்டங்களில் ரேசன் கடைக்காரர்கள் மறுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், எல்லாத்தையும் அரசாங்கமே பார்த்துக்கும் என்றால் எப்படி ? உதவி செய்பவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் ; கூட்டம் சேர்க்கக் கூடாது என அரசாங்கம் கட்டளையிட்டு அதனை ஒருங்கிணைக்க முன் முயற்சி எடுத்தால் அது ஆரோக்கியமானதாக  இருக்கும். அரசியல்கட்சிகள், தன்னர்வர்கள் என பலரும் உதவி செய்ய களமிறங்கினால்தான் வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களை காப்பாற்ற முடியும். . இதனைவிடுத்து, நிவாரண உதவிகளுக்கு தடை விதிப்பதும், நாடு எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையில் ஆளும் வர்க்கம் அரசியல் செய்யத் துடிப்பதும் மக்களை வஞ்சிக்கும் செயல் ! ‘’ என்கிறார்கள் ஆவேசமாக.

கருத்துகள் இல்லை: