செவ்வாய், 14 ஏப்ரல், 2020

இரு குழந்தைகளை கிணற்றில் வீசிகொன்ற தந்தை ... மட்டக்களப்பில்

  வீரகேசரி: தந்தையார் ஒருவர் நித்திரையிலிருந்த தனது 10 வயது மகள் மற்றும் 7 வயது மகள் ஆகிய இரு பிள்ளைகளையும் கிணற்றில் தூக்கி வீசியதில் இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலையில் இடம்பெற்றள்ளதாகவும் தந்தையாரை கைதுசெய்துள்ளதாகவும்  வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். ஓட்டுமாவடி மாவடிச்சேனை, பாடசாலை பின் வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியான  அஷிமுல் ஷிஹியா 10 வயது சிறுவனான அஷிமுல்  ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தில்  உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இரு பிள்ளைகளையும் தந்தையர் பராமரித்து வந்துள்ளதுடன் இருவரையும் கொழும்பில் பாடசாலை விடுதியில் தங்கவைத்து  கற்பித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துவந்து பராமரித்து வந்துள்ளநிலையில் சம்பவவதினமான இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நித்திரையில் இருந்த இரு குழந்தைகளையும் தூக்கிகொண்டு சென்று கிணற்றில் வீசியுள்ளார்.
அதன் பின்னர் சகோதரனிடம் பிள்ளைகளை கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் குறித்த  தந்தை சற்று  மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பொலிசாருக்கு தெரிவித்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் கிணற்றில் இருந்து இரு பிள்ளைகளும் சடலமாக மீட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் தந்தையை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: