திங்கள், 12 நவம்பர், 2018

ராமதாஸ் யாரோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்று ஆய்வு .. திமுக , காங்கிரஸ். தினகரன் ஆப்ஷன்ஸ் ஓபின் ..

யாரோடு கூட்டணி? - தைலாபுரத்தில் மனம்திறந்த ராமதாஸ்மின்னம்பலம் : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த நவம்பர் 9ஆம் தேதி தனது தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகளோடு அதிகாரபூர்வமற்ற ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.
கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர்கள், பொருளாளர், துணைத் தலைவர்கள் என்று பலரும் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார் ராமதாஸ்.
2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரு பொதுத் தேர்தல்களிலும் பாமகவுக்குப் பெரிய அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட ராமதாஸ், வரும் மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளிலாவது நாம் வென்றாக வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
‘சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது போல’ என்று ஒரு நிர்வாகி பேசத் தொடங்க, “நிச்சயமாக கிடையாது. இந்த முறை நாம் கூட்டணியோடுதான் போட்டியிடப் போகிறோம். யாரோடு கூட்டணி என்பதை நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களைக் கேட்டுத்தான் முடிவெடுப்பேன்” என்று உடைத்த ராமதாஸ் சில விஷயங்களை நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“மக்களவைத் தேர்தலை நாம் கூட்டணியோடுதான் சந்திக்க வேண்டும். இப்போதே காங்கிரஸ், தினகரன், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைக்கலாமா என்று என்னிடம் சிலர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் இப்போது இருக்கும் திமுக கூட்டணியை விட்டு வருவார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே இருந்தாலும், ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொல்லி நாம் காங்கிரஸோடு மட்டும் ஓர் உடன்பாடு செய்துகொள்ளலாம் என்றும் ஒரு திட்டம் இருக்கிறது” என்று ராமதாஸ் சொல்ல,
“ஐயா... திமுகவோடு கூட்டணி வைத்தாலும் நமக்கு திமுகவினர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க. ஆனா, திமுக அணியில் இருக்கும் காங்கிரஸோடு உடன்பாடு வைத்துக் கொண்டு திமுகவையும் எதிர்க்க முடியாது. அப்படி இருப்பதற்கு திமுக கூட்டணியிலேயே சேர்ந்துவிடலாம்” என்று கூறியிருக்கிறார் ஒரு மாநில நிர்வாகி.
அதற்கு, “காங்கிரஸ் - திமுக கூட்டணி இன்னும் எப்படிப் போகுதுனு பார்த்து முடிவெடுப்போம்” என்று சொன்ன ராமதாஸ், அடுத்து தினகரன் பற்றியும் பேசியிருக்கிறார்.
“தினகரன் அமமுக என ஒரு கட்சி தனியாக நடத்திக்கொண்டிருந்தாலும் தேர்தல் ஆணையத்தில் அவர் அதை இன்னும் பதிவு செய்யவில்லை. அவர் இரட்டை இலை சின்னத்துக்காக வழக்கு நடத்திக் கொண்டிருப்பதால் தனிக் கட்சியாகப் பதிவு செய்யவில்லை. தேர்தலுக்குள் அதிமுகவுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தினகரன் சார்பாக நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவருக்கு பொது சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் அவரோடு கூட்டணி வைப்பதற்கும் அது சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.
மேலும், “இந்த முறை கூட்டணிதான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மாவட்டச் செயலாளர்கள், மற்ற நிர்வாகிகள் என்னை நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். விரைவில் ஒரு கூட்டம் போடுவோம். அதில் எல்லாரும் தங்கள் கருத்தை எழுத்துபூர்வமாகக் கொடுக்கட்டும். அப்புறம் யாரோடு கூட்டணி என்று உங்களைக் கேட்டு முடிவெடுக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் ராமதாஸ். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஒன்றும் கிடைக்காது என்றுதான் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறார் ராமதாஸ்.
இதுதான் இப்போது பாமக உயர்மட்ட வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
அண்மையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டிகளில் திமுக, பாஜக தவிர யாரோடும் கூட்டணி அமைக்கத் தயார் என்றும், தமிழகத்தில் சில கட்சிகள் தன்னோடு கூட்டணி பற்றி பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ராமதாஸ் தனிப்பட்ட முறையில் தன் கட்சி நிர்வாகிகளிடம் பேசியதை வைத்துப் பார்த்தால் தினகரனுக்கும் பாமகவுக்கும்கூட பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் காங்கிரஸையும் இழுக்க முயற்சிகள் நடக்கின்றன!
- ஆரா

கருத்துகள் இல்லை: