புதன், 14 நவம்பர், 2018

முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்

முதல்வரைச் சந்தித்த  திருமாவளவன்
மின்னம்பலம்: சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்தவர் சிறுமி ராஜலட்சுமி (13). கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாய் எதிரிலேயே தினேஷ்குமாரால் கொடூரமான முறையில் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தினேஷ்குமாரை கைது செய்த ஆத்தூர் டவுன் போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராஜலட்சுமி குடும்பத்தினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மாலை (நவம்பர் 12) சந்தித்துப் பேசினார். முதல்வரின் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோரும் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக முதல்வரிடம் திருமாவளவன் அளித்துள்ள மனுவில், “கொலையாளி தினேஷ் மனநிலை சரியில்லாதவர் எனக் கூறி அவரைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். கொடூரமான இந்தக் கொலைகாரனை எக்காரணம் கொண்டும் தப்பிக்கவிடக் கூடாது, இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கவும், வழக்கு முடியும் வரை குற்றவாளிக்குப் பிணை வழங்காமல் இருப்பதற்கும் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் பெற்றோர் தற்போதுள்ள இடத்திலேயே குடியிருப்பது அவர்களுக்குப் பாதுகாப்பானதல்ல. எனவே அருகில் உள்ள தலித் தெருவில் அவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ள திருமாவளவன், நர்ஸிங் படித்துள்ள ராஜலட்சுமியின் மூத்த சகோதரிக்கு அரசு வேலை வழங்குமாறும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் அந்தக் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு பாதுகாப்பு தராத நிலையில், புதுச்சேரி அரசு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. இந்த நிலையில் ரவிக்குமாரின் பாதுகாப்பு தொடர்பாகவும் முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை திரும்பிய திருமாவளவன்
முன்னதாக இலங்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன், கடந்த 9ஆம் தேதி இலங்கை சென்றார். அங்கு வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்த திருமாவளவன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சார்பில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இலங்கை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும் என்கிற முழக்கத்தை முன்வைத்து, ஈழம் ஒன்றே தீர்வு என்கிற கருத்திலும் உறுதியாக இருக்கிறோம். எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு ஈழம் தான்” என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் சென்று தமிழ் மக்களுடன் கலந்துரையாடிய திருமாவளவன், நேற்று சென்னை திரும்பியவுடன் முதல்வரைச் சந்தித்துள்ளார்

கருத்துகள் இல்லை: