ஞாயிறு, 11 நவம்பர், 2018

மகிந்தா ராஜபக்சே புதிய கட்சியில் .. பொதுஜன முன்னணியில் .. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இரண்டாக உடைந்தது?

கட்சி மாறினார் ராஜபக்‌ஷேமின்னம்பலம்: இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து விலகிய அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே, இலங்கை பொதுஜன முன்னணியில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இலங்கையின் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு திடீரென ராஜபக்‌ஷேவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் வரும் 14ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று சிறிசேனா அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில், திடீரென்று நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். வரும் ஜனவரி 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், சிறிசேனாவின் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக, 50 வருடங்களாக இருந்துவந்த இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே இன்று (நவம்பர் 11) விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளார். அவருடைய மகன் நமல் ராஜபக்‌ஷேவும், சுதந்திரா கட்சியின் முன்னாள் எம்.பி.,க்கள் 50 பேரும் இந்த கட்சியில் இணைந்துள்ளனர்.

1951ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சுதந்திரா கட்சியின் நிறுவனர்களில் ராஜபக்‌ஷேவின் தந்தை டான் ஆல்வின் ராஜபக்‌ஷேவும் ஒருவர். சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவரான ராஜபக்‌ஷே, அக்கட்சியின் ஆலோசகராக பதவிவகித்து வந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை இலங்கை அதிபராக இருந்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய சிறிசேனாவிடம் தோல்வியைத் தழுவினார்.
ராஜபக்‌ஷேவின் அரசியல் மறுபிரவேசத்திற்காக அவரது ஆதரவாளர்களால் இலங்கை பொதுஜன முன்னணி கட்சி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இக்கட்சி கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றது. பொதுஜன முன்னணி கட்சியின் தலைவராக ராஜபக்‌ஷே விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: