திங்கள், 12 நவம்பர், 2018

அண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பா பல்கலை கழகம்

அண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பாமின்னம்பலம் :அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற நாடகமான நீதிதேவன் மயக்கம் என்கிற படைப்பை தமிழ்ப் பட்டப் படிப்பின் பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் எடுத்திருக்கும் முடிவுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, அம்முடிவைத் திரும்பப் பெற்றிருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம்.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முதன்மையர் முனைவர் எஸ். ராஜமோகன், பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார்.
அதில், “ 2017-20ஆம் கல்வியாண்டுக்குரிய பகுதி-1 தமிழ் மற்றும் முதுகலைத் தமிழ் பாடத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறார். அவற்றில் ஒன்றாக, இரண்டாம் ஆண்டு நான்காம் பருவ பாடக் குறியீட்டு எண் 741T – பொதுத் தமிழ் தாள்-4 – பண்டைய இலக்கியமும் நாடகமும்” – அலகு-2இல் உள்ள “நாடகம் - நீதிதேவன் மயக்கம் – அறிஞர் அண்ணா என்ற பகுதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக அரு. இராமநாதனின் ராஜராஜ சோழன் – பிரேமா பிரசுரம், சென்னை” சேர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை பல்கலைக் கழக மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அழகப்பா பல்கலைக் கழக நிர்வாகத்தின் முடிவை கடுமையாக எதிர்க்கும் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் ஆழி. செந்தில்நாதன்,
“இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் பள்ளிகளையும் காவிமயமாக ஆக்கிக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில், அறிஞர் அண்ணாவின் நாடகத்தை நீக்குவது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட அல்லது அரசியல் நிர்பந்தத்துக்கு பலியாகிற செயல்பாடாகவே இருக்கின்றன. புராண இதிகாசங்களை பாடமாகப் படிக்கலாம் என்றால் அவற்றின் மீதான விமர்சனங்களையும் பாடமாகப் படிக்கலாம் என்பதே சரியான பார்வையாகும்.
நீதிதேவன் மயக்கம் போன்ற புகழ்பெற்ற பகுத்தறிவு நூல்கள் பிறரது மனத்தை புண்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல. மாறாக மத இலக்கியங்களைப் பகுத்தறிவு மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்க்க உதவுபவையே ஆகும்.
இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், ஏற்கனவே அனைத்து துறைகளும் காவிமயமாகிவரும் நிலையில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் இச்செயல்பாட்டை வழக்கமான ஒன்று எனக் கருத இயலாது. அறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியால் ஆளப்படும் தமிழக அரசும் பல்கலைக்கழகமும் இதில் உரிய சீராய்வு செய்து, அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் என்கிற நாடகத்தை மாணவர்கள் தொடர்ந்து பயில உறுதிசெய்யவேண்டும் என்று தன்னாட்சித் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அது சேர்க்கப்படாத பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசும் அழகப்பா பல்கலைக்கழகமும் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று இது தொடர்பாக அறிக்கை விடுத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், ‘இது அண்ணா திமுக ஆட்சிதானா?’ என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.
“ நடைபெறுவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - இந்த ஆட்சியில் அண்ணாவின் நாடகம் பாடப் புத்தகத்தில் - அதுவும் பல்கலைக் கழகப் பாடப் புத்தகத்தில் - எம்.ஏ., பாடத் திட்டத்தில் இடம்பெறக்கூடாது என்பதைவிட, மிகவும் கேவலமான நடவடிக்கை வேறு இருக்க முடியுமா?
இந்திய அரசியல் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு என்ற ஒரு பிரிவு குடிமக்களின் அடிப்படைக் கடமைகளில் (Fundamental Duty) ஒன்று அறிவியல் மனப்பாங்கை, கேள்வி கேட்கும் உணர்வை, சீர்திருத்தத்தை, மனிதநேயத்தை வளர்த்து பரப்பிடவேண்டும் என்கிறது.
பல்கலைக் கழகங்களில் அதைச் செய்வதுதான் அறிஞர் அண்ணாவின் இந்நூல் கேள்விக் கணைகளை எழுப்பி கம்பரைத் திக்குமுக்காடச் செய்து, நீதிதேவன் மயக்கமுற்று விழச் செய்யும் வலிமை பெற்றது இந்தப் புதுமை இலக்கியம். உடனடியாக நீக்கிய ஆணையைத் திரும்பப் பெற்று, மீண்டும் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்” என்று வலியுறுத்திய வீரமணி, “இந்த நீக்கத்தைத் தூண்டிய சக்திகள் எவை? காரணமான மத யானைகள் எவை? பின்னணி எது? ஆராய்ந்து கண்டறிந்து - பல்கலைக் கழகத்திற்கு மதம் பிடிக்காமல் தடுத்தாகவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 12) அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் மீண்டும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தனக்குத் தெரியாமலேயே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாகவும், இப்போது அது திரும்பப் பெறப்பட்டிருப்பதாகவும் துணைவேந்தர் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பல்கலைக் கழகத்தில் விசாரணை நடத்தப்படுமென்றும் துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருப்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை: