வெள்ளி, 16 நவம்பர், 2018

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்தை நிர்வகிக்க அதிகாரி: தீபக்,ஜெ.தீபாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

/tamil.thehindu.com : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பராமரிக்கக் கோரிய வழக்கில் தீபக், ஜெ.தீபாவுக்குநோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அம்மா பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் கே. புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளைப் பராமரிக்க அதிகாரியை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உள்பட இந்தியாவின் பல இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன.
அவரது மறைவுக்குப் பின்னர், அச்சொத்துகளைப் பாதுகாத்திட அவருக்கு நேரிடையான வாரிசு கிடையாது. அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா மட்டுமே உள்ளனர். ஜெயலலிதாவின் சொத்துகளை மூன்றாம் நபர்களும் அபகரித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரூ.41 கோடி மதிப்புக்கு அசையும், அசையா சொத்துகள் தனக்கு இருப்பதாகவும், தனக்கு நேரிடையான வாரிசு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், 1996-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.200 கோடி வரை அவருக்குச் சொத்துகள் இருந்ததாகவும், அதன் தற்போதைய மதிப்பு ரூ.913 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், அவரது மறைவுக்குப் பின்னர், அந்தச் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பாதுகாக்கப்படவும் இல்லை. ஆகவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளைப் பாதுகாத்திட நிர்வாக அதிகாரியை நியமித்து உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்திருந்தனர்.
தனி நீதிபதி கார்த்திகேயன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனு நீதிபதிகள் என். கிருபாகரன், அப்துல் குத்தூஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு முன்,  மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் என்.எஸ்.நந்தகுமார் ஆஜராகி வாதிட்டார். பின்னர், இம்மனு குறித்து வரும் 28-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபக், தீபா மற்றும் தமிழ்நாடு சொத்துகள் பாதுகாப்பு நிர்வாகத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை: