புதன், 3 மே, 2017

வீரமணி : ராமானுஜரை புகழும் மோடி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வருவாரா?

சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவாரா மோடி?: கி.வீரமணி!
‘ராமாநுஜரை வானளாவப் புகழும் மோடி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வருவாரா?’ எனத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
ராமாநுஜரின் 1000-ஆவது பிறந்த தினவிழா நேற்று முன்தினம் (மே 1ஆம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு அவரது நினைவாகச் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி ராமாநுஜரின் சிறப்பு தபால் தலையை வெளியிட, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பெற்றுக்கொண்டார். அப்போது, விழாவில் பேசிய மோடி, ‘1000 ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்குச் சிந்தனையாளராக விளங்கியவர், மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் ராமாநுஜர்' என்று புகழ்ந்து பேசினார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று மே 2ஆம் தேதி பேசுகையில், ‘ராமாநுஜரைப் புகழ்ந்து பேசும் மோடி, அவரது கொள்கைக்கு ஏற்ப அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவாரா?’ என்று கேள்வியெழுப்பினார். மேலும், ‘ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அனைத்துத் தரப்பினரும் ஆலயத்துக்கு வரலாம் எனக் கூறி தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்தவர் ராமாநுஜர். அவருடைய கனவுகளை நிறைவேற்றாமல் வெறும் வாய்ப்பேச்சு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை’ என்றும் அவர் கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: