செவ்வாய், 2 மே, 2017

தனித்து செயல்பட பன்னீர் அணியினர் முடிவு.. மந்திரிகளின் நாளுக்கு ஒரு பேச்சு, செயலால் கடுப்பு.

சசிகலா அணி அமைச்சர்களின் பேச்சு, நாளுக்கு ஒரு விதமாக இருப்பதாலும், அதற்கு மாறாக, அவர்களின் செயல்பாடுகள் உள்ளதாலும், இணைப்பு பேச்சு நடத்துவது பிரயோஜனமாக இருக்காது என, பன்னீர் அணியினர் கருதுகின்றனர். அதனால், தனி அணியாகவே செயல்பட முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளையும் முடுக்கிவிட்டு உள்ளனர்.
அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இருதரப்பிலும் சிலர் ஆசைப்பட்டனர். பன்னீர் அணியினரோ, 'சசிகலா குடும்பத்தை, முழுமையாக நீக்க வேண்டும்; ஜெ., மறைவில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, நிபந்தனை விதித்தனர்.
இது பற்றி, அமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர்; முடிவில், தினகரன் குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்தனர். ஆனால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, வாய் திறக்கவில்லை.
இப்போ எல்லாம் ஓபிஎஸ் அணி எடப்பாடி அணின்னு தலைப்பை பாத்தாவே ஜனங்க வேற நியூஸுக்கு போயிர்ராங்க இனி நியூஸ் போடுற அளவுக்கு அவங்க ஒர்த் இல்ல


கட்சி அலுவலகத்தில் இருந்த, சசிகலா பேனரை அகற்றினாலும், தேர்தல் கமிஷனில் சமர்ப்பிப்பதற்காக, கட்சியினரிடம் வாங்கும் பிரமாண வாக்குமூலத்தில், சசிகலா மற்றும் தினகரன் பெயர் இடம் பெற்றுள்ளது.
முதல்வர் பழனிசாமி, சேலம் சென்ற போது, அவரை வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்ட பேனரில், சசிகலா படம் இடம் பெற்றிருந்தது. இதனால், பன்னீர் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

'பேச்சு வேண்டாம்'

சசிகலா அணியினரின் பேச்சு ஒன்றாகவும், செயல் ஒன்றாகவும் இருப்பதை, பன்னீர் அணியினர் உணர்ந்துள்ளனர். எனவே,
'பேச்சுக்கு செல்ல வேண்டாம்' என, பன்னீருக்கு, அவர்கள் நெருக்கடி கொடுக்க துவங்கினர். சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், 'பேச்சு வேண்டாம்' என, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனால்,தொண்டர்கள் விருப்பத்திற்கேற்ப, தனித்து இயங்க, பன்னீர் அணியினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளையும் துவக்கி உள்ளனர். எம்.ஜி.ஆர்., - தி.மு.க.,வில் இருந்து பிரிந்து வந்த போது, முதலில் மாவட்ட வாரியாக அமைப்பாளர்களை நியமித்தார்.
அதே போல, தற்போதும் பன்னீர் அணி சார்பில், மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அமைப்பாளர்களை நியமித்த பின், மே, 5ல் இருந்து, தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், தன் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து துவக்கவும், பன்னீர் திட்டமிட்டு உள்ளார்.

இது குறித்து, பன்னீர் அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:நாங்கள் தனித்து இயங்க தயாராக உள்ளோம். எங்கள் பக்கம், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர். 'சசி அணியினர் எங்களுடன் இணைய விரும்பினால், எங்கள் நிபந்தனைகளை, இரு நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்' என, கூறியுள்ளோம்.
அதன்படி செயல்பட்டால், பேச்சை துவக்குவோம். இல்லையெனில், தனித்து செயல்படுவதுடன், கட்சியைமீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மகாதேவன் படத்திறப்பு அமைச்சர்கள் பங்கேற்பு

தஞ்சாவூரில் நேற்று முன்தினம், சசிகலா அண்ணன் மகன் மகாதேவன், உருவப்படம் திறப்பு, சசிகலா கணவர் நடராஜன் தலைமையில் நடந்தது. இதில், அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன், காமராஜ், துரைகண்ணு, எம்.எல்.ஏ.,க்கள் ரங்கசாமி, நடிகர் கருணாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதுவும், பன்னீர் அணியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் பழனிசாமி பேச்சுஇணைப்புக்கு முற்றுப்புள்ளி


அ.தி.மு.க., இரு அணிகள் இணைப்பை, இரு அணிகளிலும் உள்ள, முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை. அவர்கள் பேச்சை துவக்க, முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இந்த சூழலில், இரு தினங்களுக்கு முன், சேலத்தில், பன்னீர் அணியினர் ஆலோசனை நடத்தினர்.
கூட்டம் முடிந்ததும், முன்னாள் அமைச்சர் செம்மலை அளித்த பேட்டியில், 'சசிகலா அணியுடன், பன்னீர் அணி இணைவதை, கட்சி தொண்டர்கள் விரும்பவில்லை. சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்க, அந்த அணியினர் மறுக்கின்றனர். அவர்களுடைய செயல் நாடகம் போல் உள்ளது' என்றார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று முன்தினம் சேலத்தில், முதல்வர் பழனிசாமி பேசும் போது, 'கட்சி, 90 சதவீதம் நம்மிடம் உள்ளது. கட்சி, ஆட்சியை நடத்துபவர்கள் நாம்; இதை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது' என்றார். அவரது பேச்சே, பன்னீர் அணியினர், தனி ஆவர்த்தனம் என்ற முடிவை எடுக்க காரணமாக அமைந்துள்ளது.
- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: