திங்கள், 1 மே, 2017

டாஸ்மாக் லாரியில் வெடிகுண்டு:போலீசார் விசாரணை!

டாஸ்மாக் லாரியில் வெடிகுண்டு:போலீசார் விசாரணை!மின்னம்பலம் : திருவாரூரில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் விளமல் அருகே அரசுக்குச் சொந்தமான மதுபான குடோன் ஒன்று உள்ளது. கோவையில் இருந்து இந்த குடோனுக்கு மதுபான பாட்டில்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இந்நிலையில், விளமல் குடோனில் மது பாட்டில்கள் இறக்கிக் கொண்டிருக்கும்போது லாரியில் வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதைக் கண்டு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்த மோகன் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில் மோகன் சென்னையை அடுத்த எண்ணூரைச் சேர்ந்தவர் என்பதும், ராஜ்குமார் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் வெடித்தால் மூன்று கி.மீ. தூரத்துக்கு ஒன்றும் இல்லாமல் தரைமட்டமாகிவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு சம்பவத்தில் கார் ஒன்றும் காவல்துறையினரிடையே சிக்கியுள்ளது. அது சித்தலபாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்குச் சொந்தமான கார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: