புதன், 3 மே, 2017

மாறன் சகோதரகளின் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத்துறை மேல்முறையீடு!

மின்னம்பலம் : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத்துறை மேல்முறையீடு!கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரிடமிருந்த ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி விற்பனை செய்ய வைத்ததாகப் புகார் கூறப்பட்டது. மேலும், ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதும் அதற்குக் கைமாறாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டி.வி. நிறுவனத்தில் சுமார் ரூ.742 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., தயாநிதி, கலாநிதி, மேக்சிஸ் நிறுவன உரிமையாளரும் மலேசிய வாழ் வம்சாவளி இந்தியரான டி.அனந்தகிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டி.வி, மேக்சிஸ் நிறுவனம், சௌத் ஏசியா எஃப்.எம் நிறுவனம் ஆகியவை மீது வழக்கு தொடர்ந்தது.

இதேபோல, கோடிக்கணக்கான நிதிப் பரிவர்த்தனை தொடர்புடைய இந்த விவகாரத்தை மத்திய அமலாக்கத்துறையும் விசாரித்தது. இதில் கலாநிதி மாறனின் மனைவி காவேரி குற்றம் சாட்டப்பட்டவராக வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரு துறைகளும் தொடர்ந்துள்ள வழக்கை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், சௌத் ஏசியா எஃப்.எம். மேலாண் இயக்குநர் சண்முகம் ஆகியோர் இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யவும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 16இல் நிறைவடைந்து, அதன் தீர்ப்பு நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் மிக அதிக அளவில் இருப்பதாலும் ஆவணங்களில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாலும் அதன் உத்தரவு ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து, இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் குற்றம் செய்ததற்குப் போதிய முகாந்திரம் இல்லாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மே 2ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: