திங்கள், 1 மே, 2017

தினகரன் 15 நாள் திகார் சிறையில் ... டெல்லி உயர்நீதிமன்றம்

தினகரனை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் கைதான டி.டி.வி.தினகரனுக்கு மே 15 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 நாட்கள் போலீஸ் காவலுக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் திங்கள்கிழமை (இன்று) டெல்லி தில் ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் புரோக்கராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16ஆம் தேதி டெல்லியில் கைதானார். அவரிடமிருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

டெல்லி கோர்ட் அனுமதியுடன் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். டெல்லி உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸ் படையினர் தினகரன், மல்லிகார் ஜுனாவை சென்னைக்கு அழைத்து வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த விசாரணைக்குப் பின் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய ஹவாலா ஏஜெண்டு நரேஷ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பியபோது நரேஷ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, டி.டி.வி.தினகரன் முன்னிலையில் ஹவாலா ஏஜெண்டு நரேஷை வைத்து நேரடியாக விசாரணை நடத்தினார்கள். இதில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தினகரனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் 5 நாள் போலீஸ் காவல் திங்கள்கிழமை இன்றுடன் முடிந்தது. அதேபோல், ஹவாலா ஏஜெண்டு நரேஷின் 2 நாள் காவலும் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ் ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை (இன்று) மாலை 4 மணிக்கு டெல்லி தில் ஹசாரே கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது டி.டி.வி.தினகரனை மே 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொலி காட்சி மூலம் தினகரனை விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மே 15 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் டி.டி.வி.தினகரன். அதுபோல், தினகரன் நண்பர் மல்லிகாஜுனாவையும் மே 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் டிடிவி தினகரனுக்கும், மல்லிகார்ஜூனாவுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களிடம் மேலும் விசாரிக்க வேண்டி உள்ளதால் போலீசார் காவல் நீடிப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு தினகரனை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துகிறார்கள்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: