ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தினகரன் விசாரணை.. அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன!

மார்க்ஸ் அந்தோணிசாமி :வெளிமாநிலத்தில் இருக்கும் என் நெருங்கிய நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் சற்றுக் கோபமாக ஒன்றைச் சுட்டிக்காட்டி ஆவேசப்பட்டார்.
தினகரன், சசிகலா ஆகியோருக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் சிறையில் சசிகலாவுக்கு அடிப்படை வசதிகள் அளிக்கப்படவில்லை என ஒரு மலையாள இதழில் வந்துள்ளதாகவும், தினகரனை விசாரணை எனும் பெயரில் இரவு பகலாக இப்படி இழுத்தடிப்பதை மனித உரிமை பேசுகிற நீங்கள் எல்லாம் எப்படிக் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்றும் சற்றுக் கோபமாகக் கேட்டார். அவர் அப்படி ஒன்றும் அதிமுக ஆதவாளர் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
நான் சொன்னது:
"சிறைக் கைதிகள் உட்பட, கடும் குற்றவாளிகளாக இருந்த போதும் அவர்களுக்கு உரிய சட்டபூர்வமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களைப் போன்றவர்கள் உறுதியாக இருக்கிறோம். நிர்பயா படுகொலைக்குக் காரணமானவர்களைக் கூட மரண தண்டனைக்கு ஆளாக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லி, அதற்காகப் பலராலும் கண்டிக்கப்பட்டவன் நான். எனது முஸ்லிம் நண்பர்கள் இந்த அம்சத்தில் என்னைக் கூடுதலாகக் கண்டித்துள்ளனர்.

"நீங்கள் சொல்லும் விடயத்தைப் பொருத்த மட்டில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு சிறையில் என்ன நிலைமை என எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்வது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. தினகரனை விசாரணை எனும் பெயரில் இழுத்தடிப்பதை நானும் கவனித்தேன்.
"ஆனால் இதெல்லாம் ரொம்ப high profile வழக்குகள். யாரும் அற்றவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்குத்தான் நாங்கள் முதலிடம் தருகிறோம். இன்னொன்றையும் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும். இப்படி நடப்பது , அது உண்மையானால். அது ஏதோ சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மட்டும் முதன் முதலில் நடப்பது அல்ல. இங்கு கைது செய்யப்படும் அத்தனை பேருக்கும், குறிப்பாக முஸ்லிம்கள், தலித்கள் இப்படியானவர்கள் அவ்வளவு பேருக்கும் நடப்பதுதான் இது. நேற்று பாருங்கள் ஒரு ஐந்து முஸ்லிம்கள், எல்லோரும் நம் மதுரைக்காரர்கள் 20 ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பின் குற்றவாளிகள் இல்லை என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பட்ட துயரங்களை எல்லாம் உங்களைப் போன்றவர்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
" இப்படி நான் சொல்வதை வைத்துக் கொண்டு சசிகலா, தினகரன் போன்றவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உண்மையானால் அவற்றை கண்டிக்கத் தேவையில்லை என நான் சொல்வதாக நினைக்க வேண்டாம்."
Marx Anthonisamy முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: