ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

திருமாவளவனின் திருமணம் ... பெற்றோரின் ஆசை நிறைவேறுமா?

ஜாதகப்படி ஆறு மாசத்துல திருமணம் நடக்கணுமாம்.. >திருமாவளவனுக்கு கெடு விதிக்கும் அம்மா! “கல்யாண மண்டபத்துல இருந்து பாட்டுச் சத்தம் கேட்டாலே எம் மனசு என்ன பாடு படும்னு எனக்குத்தான் தெரியும். கும்ப ராசி, மீன லக்னத்துக்கு என் மகனோட ஜாதக அமைப்புப் படி, ‘ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தாத்தான் உண்டு. அப்புறமா நடக்காது’னு சொல்லிட்டாங்க. ஊருக்கு வேணும்னா நீ தலைவரா இருக்கலாம். எனக்கு நீ மகன்தான். உனக்கு ஆறு மாசம்தான் கெடு. என்னோட ஆசைய... நீ நிறைவேத்தலைனா... நான் எடுக்கப்போகும் முடிவும் ரொம்ப கடுமையானதா இருக்கும். அதை உன்னால தங்கமுடியாது தம்பி” - இப்படி கண்ணீர் மல்கப் பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தாய்  பெரியம்மா.


திருமாவளவனுக்கு தற்போது 54 வயது ஆகிறது. அவர் திருமண எண்ணமே இல்லாமல் இருப்பது, தாய் பெரியம்மாவுக்குப் பெரும் கவலையாக உள்ளது. ‘பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்கிறாரே’ என்ற ஆதங்கம், அந்தக் கவலையை இன்னும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் அங்கனூரில் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் கட்டிய குடிசை வீட்டில் வசித்து வரும் பெரியம்மாவைச் சந்தித்தோம். அப்போது, தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.
“திருமண விஷயத்தில் உங்கள் மகன் என்ன சொல்கிறார்?”

‘‘சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டுதான் படிச்சார். கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. மதுரையில வேலை பார்த்தார். அப்பவே மதுரைக்குப் போய், ‘கல்யாணம் செஞ்சுக்கப்பா’னு சொன்னேன். ‘கொஞ்ச நாள் போகட்டும் அம்மா’னு சொன்னார். அப்புறம், அரசியல்ல இறங்கிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட ஆரம்பிச்சார். பதிமூணு வயசுல வீட்டை விட்டுப் போன என் மகன், இப்பவரைக்கும் ஒரு நாள் கூட வீட்ல ஆற அமர உட்கார்ந்து எங்கிட்டப் பேசுனது இல்லை.

‘எனக்குப் பணம் கொடு... நல்ல மெத்த வீடு கட்டிக்கொடு... என்னை சொகுசா வாழ வை...’ அப்படீன்னா கேக்குறேன். ‘நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கப்பா’னுதானே கேக்குறேன். என்னோட கஷ்டம்  ஏன் உனக்குப் புரியமாட்டேங்குது? 2009-ல அப்பா உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தப்போ, கல்யாணம் செஞ்சுக்கிறதா அப்பாகிட்ட சத்தியம் செஞ்சு கொடுத்தியே. அது ஞாபகம் இருக்கா? அந்த சத்தியம் என்னாச்சு தம்பி? அப்பாவை ஏமாத்திப்புட்ட. அந்த மாதிரி என்னையும் ஏமாத்திப்புடாதப்பா. உன் சந்ததி இத்தோட முடிஞ்சிடக் கூடாது தம்பி. உனக்கு நல்லபடியா கல்யாணம் முடிஞ்சிட்டா போதும். அதைப் பாத்துட்டு நிம்மதியா கண்ணை மூடிருவேன்.  எனக்காக நீ இதை மட்டும் செஞ்சா போதும்.”
“திருமணம் செய்துகொள்ளாததற்கு அவர் என்ன காரணம் சொல்கிறார்?” 

“கல்யாணத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே, பேச்சை மாத்திடுவார். ‘அம்மா... உனக்கு உடம்பு சரியில்லைனு சொன்னியே. உடனே சென்னைக்கு வாம்மா’னு பேச்சை மாத்திடுவார். திருமாவுக்கு 25 வயசு ஆனதுல இருந்தே பொண்ணு பாக்குறேன். முதல்ல, அவரோட மாமன் மகளைத்தான் பார்த்தோம். ‘இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்மா... கொஞ்ச நாள் போகட்டும்’னு சொன்னார். நாங்களும் காத்திருந்தோம். பதிலே வரல. சரி, தலைவர்கள் சொன்னா கேட்பார்னு நெனைச்சு, நானும் அவுங்க அப்பாவும் சேர்ந்து மூப்பனார், ராமதாஸ், கலைஞர், வைகோ... இப்படி தலைவர்களை எல்லாம் பாத்துப் பேசினோம். அவங்க சொல்லியும் மசியலை. போன வாரம், பெரம்பலூர்ல ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே திருமாவைப் பாத்தேன். ‘எவ்வளவு நாளைக்குப்பா இப்படி தனிமரமா இருக்கப்போறே’னு கேட்டேன். வழக்கம்போல, பதிலே சொல்லாமப் போயிட்டார்.”
“சமீபகாலமாக, உங்கள் மகனுக்குப் பல இடங்களில் நீங்கள் ஜாதகம் பார்த்து வருவதாகக் கேள்விப்பட்டோமே?” 

“உண்மைதாங்க. சமயபுரம், திருமணஞ்சேரி, சிதம்பரம், சூரியனார் கோயில்னு போகாத ஊர் இல்லை. ஏறாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. ஐம்பது ஜோசியர்கள்கிட்டயாவது ஜாதகம் பார்த்திருப்பேன். இப்போதுகூட, சேலம் நாலு ரோட்டுல இருக்குற ஜோசியரை பாத்தேன். திருமாவோட ஜாதக அமைப்புப் படி, ‘இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தாத்தான் உண்டு; அப்புறமா நடக்காது’னு சொல்லிட்டாரு. இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது. என் மகனே என்கிட்ட வந்து, ‘அம்மா எனக்கு கல்யாணம் செஞ்சு வை’னு சொல்லணும். அப்படி இல்லைன்னா, நானே ஒரு பொண்ண பாத்துட்டு, பத்திரிகை அடிச்சிட்டு... ‘வந்து  தாலி கட்டு’னு சொல்லப் போறேன்.’’

கண் கலங்கி, நா தழுதழுக்க, சொல்லி முடிக்கிறார் அந்தத் தாய்.

- எம்.திலீபன்
படங்கள்: ராபர்ட்  விகடன்

கருத்துகள் இல்லை: