புதன், 29 ஆகஸ்ட், 2012

கிரானட்டுக்காக ஜெயலலிதாவிடம் தூது போன CPI பாண்டியன்

முதல்வர் ஜெயலலிதாவிடம் ‘கிரானைட் கிங்’ தூதுவராக சென்ற ‘ரெட் கிங்’!

Viru News
ஆயிரக்கணக்கான கோடிகளில் வருமானத்தையும் இழந்து, சிறையிலும் வாட வேண்டிய நிலை ஏற்பட்ட கோடீஸ்வரர், சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ள, ‘எல்லா விதமான’ முயற்சிகளிலும் இறங்க மாட்டாரா? நிச்சயம் இறங்குவார். பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமியும் செய்யாத முயற்சிகள் இல்லை.
அவருடைய தூதர்கள் டில்லியிலும், சென்னையிலுமாக கை நிறைந்த, அல்லது பை நிறைந்த நிலையில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதில் பாட்டாளி மக்களின் கரத்தை உயர்த்துவதாக கூறும் தலைவரின் கையும் உள்ளதுதான், தமாஷ்.
ஏற்கனவே, தமிழக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்ட தொடர்புதான். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன், கட்சித் தோழர்களை கல்தூண் போல் தாங்கிக் கொள்வார் என்று அவரது கட்சியில் சொல்கிறார்கள். ஒரு விதத்தில் அதுவும் நிஜம்தான். தலைவரோ கிரானைட் கல்லுக்கு அருகில்தான் உள்ளார்.

மாநில தலைமையை சமாளிக்க முடியுமா என்று பார்த்துவர, பி.ஆர்.பி.-யின் தூதராக சென்றவரே, நம் செந்தோழர்தான் என்று தெரியவருகிறது.
தமிழக முதல்வரை ‘வேறு விஷயமாக’ சந்திக்க விரும்புவதாக அப்பாயின்ட்மென்ட் பெற்றிருந்த தோழர், சந்திப்பின்போது பி.ஆர்.பி. விஷயத்தில் நூல் விட்டு பார்த்தார் என்று சிரிக்கிறார் அ.தி.மு.க. தலைமையுடன் நெருக்கமான ஒருவர்.
“என்ன இருந்தாலும் அவரது கட்சிக்காரர்கள் பேச்சில் சாமர்த்தியசாலிகள் அல்லவா? கூடங்குளம் அணு உலை தொடர்பாக பேசியபோதும் சரி, ‘கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும்மா நம்ம கட்சி’ என்று உத்தரவாதம் கொடுத்தபோதும் போதும் சரி, லேசாக பேச்சை வளைத்து, பி.ஆர்.பி. விவகாரம் பக்கமாக வந்தார். ஆனா, முதல்வர் ஜெயலலிதா  கும்பிடு போட்டு ஆளை அனுப்பி வைத்துவிட்டார்” என்றார் நமக்கு தகவல் கொடுத்தவர்.
சரி, இந்த விவகாரம்தான் ஊத்திக் கொண்டதே என்று, அருவாவை வைத்துவிட்டு, சுத்தியை எடுத்திருக்கிறார் தோழர். சிறையில் உள்ள தமது கட்சி (தளி தொகுதி) எம்.எல்.ஏ. பற்றியும் பிரஸ்தாபித்திருக்கிறார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. வெற்றிகரமாக பின்வாங்கிக் கொண்டார்.
என்ன இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் கொள்கையில் உறுதியானவர்கள்தான்..  நாட்டையும் வீட்டையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை என்பது அவர்களது கொள்கை.
வீட்டையும், அதை கட்டிக் கொடுத்த நபரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?

கருத்துகள் இல்லை: