திங்கள், 27 ஆகஸ்ட், 2012

கூவத்தின் வரலாறும் ஜெயாவின் வரலாறும் தெரிந்த ராதாரவி !

 நடிகர் ராதாரவி திமுகவில் இருந்த பொழுது ஜெயலலிதாவை மிக ஆபாசமாக பேசியதாலோ என்னவோ அதே ஜெயாவை இந்தியாவின் பிரதமராக்கியே பிராயச்சித்தம் செய்வது என்று  தீர்மானித்துள்ளார். அந்த பதவி என்பது வழித்தேங்காய் அல்ல என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.இருக்கும் இடம் அப்படி.
Viru News
“புரட்சித் தலைவிக்கு இந்தியாவின் பிரதமராக ஆசை இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல, இந்தியா தான் புரட்சித் தலைவி பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறது” இவ்வாறு, இந்தியாவின் உள்மனதில் உள்ள ஆசையை அறிந்து கூறியிருக்கிறார், அ.தி.மு.க.-வின் பிரசார போர் வாள், நடிகர் ராதாரவி.
நாகர்கோவிலில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு, கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசினார். மார்க்கெட் போன நட்சத்திரங்கள்தான் அரசியலில் வந்து அவ்வப்போது ஏதாவது பேசிவிட்டு போகிறார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. அந்தக் கருத்தை முறியடிக்கவும் ராதாரவி தவறவில்லை.

“நான் இப்போது கூட வருடத்திற்கு 5 படங்களிலாவது நடிக்கிறேன்” என்றவர், “வடிவேலு ஒரு நல்ல நடிகர். அவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். அவர் கேட்கவில்லை. ஒரே நாள் ராத்திரியில் இருந்து அவருக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது” என்றார்.
தமிழகத்தின் பிரச்னைகள் பற்றி பேசுவதற்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ராதாரவி, குஷ்புவுக்கு கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாது. ஆனால் அவரோ, இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார்” என்றார்.
ராதாரவிக்கு கூவத்தின் வரலாறும் தெரிந்திருக்கிறது. குஷ்புவும் வரலாறும் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் உள் மனசும் தெரிந்திருக்கிறது. இல்லாவிட்டால், புரட்சித் தலைவியை பிரதமராக்க வேண்டும் என்று இந்தியா தனது தகுதிக்குமேல் கனவு காண்பதை இவர் கண்டு பிடித்திருப்பாரா?
இந்தியாவுக்கே கூட இந்த விஷயம் தெரியுமா என்று தெரியவில்லை!

கருத்துகள் இல்லை: