சனி, 1 செப்டம்பர், 2012

பத்மசேஷாத்திரி பள்ளி நீச்சல் குளம் சட்டவிரோதமானது

KK.நகரில் உள்ள பத்மசேஷாத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியில் 16-ந் தேதி ரஞ்சன் என்ற மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோனான். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 304(ஏ) பிரிவின் கீழ் (ஜாமீன் பெறக்கூடிய குற்றச்சாட்டு) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பள்ளியின் முக்கிய நிர்வாகி தவிர மற்ற சிலரை போலீசார் அழைத்து விசாரித்துவிட்டு, ஜாமீனில் அவர்களே அனுப்பிவிட்டனர். எனவே, இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடுமையான குற்றப் பிரிவின் கீழ் (இந்திய தண்டனைச் சட்டத்தின் 344 (2) பிரிவு) வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் கார்த்திக்ராஜா, புகழேந்தி ஆகியோரும், அந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வராகி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
அரசுத் தரப்பில் அரசுப் பிளீடர் வெங்கடேஷ், பள்ளித் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் எம்.ராதாகிருஷ்ணன், விஜயநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ’’நீச்சலை கட்டாய பாடமாக பள்ளிகளில் வைக்க முடியுமா? என்று கோர்ட்டு எழுப்பி இருந்த கேள்விக்கான பதிலை, சி.பி.எஸ்.இ. வாரியம் தாக்கல் செய்துள்ளது. அதில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஒரு பள்ளியை இணைப்பதற்கான விதியில், நீச்சலை ஒரு பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் கல்விசாரா பயிற்சியாக பள்ளிகள் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த பள்ளி கட்டிடத்துக்கான அனுமதி கேட்டு 23.2.89 அன்று தமிழக அரசிடம் பள்ளியின் அறக்கட்டளை விண்ணப்பித்தது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில், பிரச்சினைக்குரிய நீச்சல் குளத்தை அவர்கள் காட்டவில்லை என்றும், ஆனால் விண்ணப்பித்த திட்டத்துக்கு மாறாக நீச்சல் குளத்தை கட்டியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்தை கட்டிவிட்டு அங்கீகாரம் கேட்டதால் அதை தமிழக அரசு ஏற்காமல் 29.3.10 அன்று நிராகரித்து உத்தரவிட்டது. திட்ட அனுமதி பெறாமல் நீச்சல் குளம் கட்டி, அதை பயன்பாட்டுக்கும் விடுவது சட்டவிரோதமானது.
பள்ளிக்கட்டிடம் கட்டி 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நீச்சல் குளத்தையும் உள்ளடக்கிய திட்டத்தை அங்கீகாரத்துக்காக அரசிடம் சமர்ப்பித்ததாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. அந்த நீச்சல் குளம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்க வேண்டும்.
பள்ளி தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதத்தில் ஏதாவது தவறு இருப்பதாகத் தெரிந்தால் அந்த நீச்சல் குளத்தை இடிப்பதற்கு கோர்ட்டு உத்தரவிடத் தயங்காது.
சென்னையில் சட்டவிரோதமாகவும் அங்கீகாரம் இல்லாமலும் கட்டிடத்தை கட்டிவிட்டு, அதற்குப் பின்பு அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை அதிகம் உள்ளது. இந்த முறையை சி.எம்.டி.ஏ. ஒழிக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை சி.எம்.டி.ஏ. ஏற்றுக் கொள்ளக் கூடாது.
போலீஸ் விசாரணை இன்னும் முடியவில்லை என்று அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்டுக் கொண்டதால் 4 வாரங்களுக்கு வழக்கு தள்ளிவைக்கப்படுகிறது. புலன் விசாரணை முடிவில் தெரிய வரும் குற்றச்சாட்டின் தன்மைக்கு ஏற்ப, சட்டப்பிரிவுகளை போலீசார் மாற்றவோ, கூட்டவோ செய்யலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: