வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஆஸ்திரேலியாவில் ‘ஆசியர்களும், இந்தியர்களும் வேண்டாம்’ விளம்பரம்!

Viru News
ஆஸ்ரேலியாவின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின், ‘இனப் பாகுபாடு’ காட்டியது என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இவர்களை சிக்கலில் சிக்க வைத்திருப்பது, ஒரு விளம்பரம். சூப்பர் மார்க்கெட்டை கிளீன் செய்யும் வேலையாட்கள் தேவை என இவர்கள் செய்திருந்த ஆன்-லைன் விளம்பரத்தில், “ஆசியர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்க வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கோல்ஸ் சூப்பர் மார்க்கெட் (Coles supermarket) இந்த விளம்பரத்தால் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இனப் பாகுபாடு காட்டுவது, ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமானது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியன் மாநிலத்தின் தலைநகர் ஹோபார்ட்டுக்கு அருகேயுள்ளது குறிப்பிட்ட இந்த ஸ்டோர்.
“வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரத்தில் இடம்பெற்ற ‘ஆசியர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்க வேண்டாம்’ என்ற வாக்கியம் தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது” என்று கூறியிருக்கிறது சூப்பர் மார்க்கெட் நிர்வாகம்.
விளம்பரம்
“குறிப்பிட்ட கிளீனிங் வேலை, கான்ட்ராக்டர் ஒருவரிடம் விடப்பட்டுள்ளது. அவர் செய்த விளம்பரத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்து எமக்கு தெரிவிக்கப்படவில்லை” என அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது அந்த கான்ட்ராக்டர் நீக்கப்பட்டு, புதிய கான்ட்ராக்டர் ஒருவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய கான்ட்ராக்டரிடம், இன பாகுபாடு தொடர்பான தமது கொள்கை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது எனவும், சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், அங்கு இயங்கும் மனித உரிமை அமைப்புகள், இந்த விவகாரத்தை லேசில் விடப்போவதில்லை என அறிவித்துள்ளன. யார் விளம்பரம் கொடுத்திருந்தாலும், பணி கோல்ஸ் சூப்பர் மார்க்கெட்டில்தான் என்பதால், அவர்கள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்கின்றன மனித உரிமை அமைப்புகள்.
விவகாரம், நீதிமன்றம் செல்லவுள்ளது. மாநில அரசும், நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: