புதன், 29 ஆகஸ்ட், 2012

காய்ச்சிய குடிநீர் வழங்காத ஓட்டல்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம் :காய்ச்சிய குடிநீர் வழங்காத ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அதிகாரி எச்சரித்துள்ளார். இதுசம்பந்தமாக, காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் இன்று அளித்த பேட்டி: தற்போது மழைக்காலம் நெருங்கி வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, எலி காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் நோய்கள் தாக்கும் ஆபத்து வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் சுகாதார மாவட்டத்தில் அடங்கிய காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் சுகாதார விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
குழுவில் ஒன்றிய மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர், துப்புரவு ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர், தன்னார்வ குழுவினர் இடம்பெறுவார்கள். குழுவினர் இன்று முதல் கிராமங்களுக்கு சென்று சுகாதார பணிகள் மேற்கொள்வார்கள். கிராமங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். குப்பைகள் மூலம்தான் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே, வீட்டில் சேரும் குப்பைகளை உடனடியாக அகற்றிவிடவேண்டும். 7 நாட்களுக்கு பிறகு தண்ணீரை பயனப்படுத்தக்கூடாது. வீடு அருகே தண்ணீர் தேங்குவதை தடுக்கவேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் வைத்திருக்கவேண்டும். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீரை வழங்கவேண்டும். அப்படி வழங்காத ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏசி, பிரிட்ஜ்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கிருஷ்ணராஜ் கூறினார்.

கருத்துகள் இல்லை: