திங்கள், 27 ஆகஸ்ட், 2012

லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க தயார் நாற்பதும் நமதே

சென்னை: எப்போது வேண்டுமானாலும் வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தொகுதி வாரியாக, பொறுப்பாளர்களை நியமிக்க அ.தி.மு.க., தலைமை தயாராகி வருகிறது. இதற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
தற்போதுள்ள மத்திய அரசின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எப்படி இருந்தாலும், இன்னும் ஓராண்டுக்குள், லோக்சபா தேர்தல் வரும் என, அ.தி.மு.க., தரப்பில் நம்பப்படுகிறது. தேசிய அரசியலில் தன்னுடைய பங்களிப்பு பலமாக இருக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். ஆகையால் வரும் லோக்சபா தேர்தலில், "நாற்பதும் நமதே' என்ற கோஷத்துடன் களமிறங்க, அ.தி.மு.க., தயாராகி வருகிறது.

ஒரு கோடிக்கு மேல் ஓட்டு வங்கியுள்ள, மாணவ சமுதாயத்துக்கு, லோக்சபா தேர்தல் அறிவிப்பதற்கு முன், லேப்-டாப் வழங்கி, அவர்களின் ஓட்டுக்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காகத் தான், கல்லூரி மாணவர்களுக்கு வேகமாக லேப்-டாப் வழங்கும் பணியை அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றனர்.அதேபோல், கடந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., அறிவித்த இலவசங்களும் தொடர்ந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறமுடியும் என, அ.தி.மு.க., தலைமை நம்புகிறது.

எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாகவும், முதல்வர் ஜெயலலிதா, தன் ஆலோசகர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.இச்சூழலில், லோக்சபா தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் விதமாக, லோக்சபா தொகுதி வாரியாக, அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த பட்டியல் விரைவில் கட்சித் தலைமையால் வெளியிடப்படும் என்றும், கட்சி வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

லோக்சபா தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுபவர், அந்த தொகுதியில் தொடர்ந்து கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்துவது, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக புதிய ஓட்டுக்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்.லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியானவுடன், கட்சியினர் ஜரூராக தேர்தல் பணியில் இறங்குவர் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.இளைஞர்கள் மற்றும் பெண்களை குறிவைத்தே, அ.தி.மு.க., லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப வரும் காலங்களில், பெண்களுக்கான புதிய திட்டங்களும் அறிவிக்க அரசு தயாராகி வருகிறது

கருத்துகள் இல்லை: