புதன், 10 ஆகஸ்ட், 2011

யாழில் மின்வெட்டும் கோவில் ஒலிபெருக்கிகளும் மாணவர்களுக்கு தொல்லை

யாழ். குடாநாட்டில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுவரும் மின்வெட்டால் நேற்று ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். நேற்று நாடு முழுவதும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் மின் வெட்டு அமுலில் இருந்தது. இரவு 7 மணிக்கு வழங்கப்பட்ட மின்சாரம் மீண்டும் இரவு 7.10 மணிக்கு துண்டிக்கப்பட்டது. பின்னர் 8.15 மணிக்கே மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் மறுநாள் பரீட்சைக்கு தம்மை தயார்படுத்த முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டதாகவும் மாணவர்களின் பெற்றோரும் பெரும் விசனமடைந்ததாகவும் எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் இவ்வாறு அடிக்கடி மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பரீட்சைக் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மின்சார சபையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சீரான விநியோகத்தை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மின்வெட்டு பிரச்னை இடைக்கிடை வருமென்றால் கோவில் ஒலி பெருக்கிகளின் கொடுமை சொல்லி மாளாது. காவல் துறையினரும் இதில் தலையிட பின்வாங்குவதாக தெரிகிறது. சட்டத்தை மீறி அளவுக்கு அதிகமான சத்தத்தில் ஒலிபெருக்கிகள் அலறினாலும் பரவாயில்லை அதில் ஏதாவது நாம் நடவடிக்கை எடுக்கப்போக அது எதோ மனித உரிமை மீறல் என்று புலன்பெயர் கூட்டம் கூச்சல் போடுமோ என்ற தயக்கம் போலும்.

கருத்துகள் இல்லை: