புதன், 10 ஆகஸ்ட், 2011

போலி என்கௌண்டர் செய்யும் போலீசாரை தூக்கிலிட வேண்டும்

டெல்லி: போலி என்கௌண்டர் செய்யும் போலீசாரை தூக்கிலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தை கையில் வைத்திருக்கும் போலீசார் மக்களை காக்க வேண்டியவர்களே தவிர, அவர்களை கொல்லும் கூலிப்படையல்ல என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கத்ஜு மற்றும் சி.கே. பிரசாத் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.

இது குறித்து நீதிபதி கத்ஜு கூறுகையில்,
போலி என்கௌண்டர் மூலம் மக்களைக் கொல்வது ஒரு திட்டமிட்ட கொலையாகும். பெருங்குற்றமாகக் கருதி அதை செய்த போலீசாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி ராஜஸ்தான் போலீசின் தனிப்படை தாதா சிங்கை போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றது. இதில் தொடர்புடைய 2 மூத்த அதிகாரிகளான கூடுதல் டிஜிபி அர்விந்த ஜெயின் மற்றும் எஸ்பி அர்ஷத் ஆகியோரை சரணடையுமாறு உத்தரவிட்டபோது தான் நீதிமன்றம் இவ்வாறு கூறியது.
இந்த 2 அதிகாரிகளும் சரண் அடையாவிட்டால் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அவர்களை கைது செய்யலாம் என்று அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் ரத்தோர் தலைமறைவாகிவிட்டார் என்று தாரா சிங்கின் மனைவி தெரிவித்தார். அதற்கு ரத்தோர் சரணடையாவிட்டால் அவரைக் கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சாதாரண மக்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை அளிக்கலாம். ஆனால் போலீசார் குற்றம் செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றனர்.
ராஜஸ்தான் போலீஸ் தனது கணவரை கடத்தி, அநியாயமாக போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றுவிட்டதாக தாரா சிங்கின் மனைவி சுஷீலா தேவி புகார் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்குமாறு ராஜஸ்தான் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்டது.
தாரா சிங் பல குற்றங்கள் செய்தவன். அவன் தலைக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்று ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் மகாராஷ்டிரா போலீசார் ஒரு தொழில் அதிபரை போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து போலி என்கௌண்டர் செய்யும் போலீசாருக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
உயர் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கூறினார்கள் என்பதற்காக என்கௌண்டர் என்ற பெயரில் கொலை செய்யும் போலீசாரை எச்சரிக்கின்றோம். போலி என்கௌண்டர் செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: