வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழகம் வழியாக இலங்கைக்கு மின் வினியோகம் நிறுத்தம்.ஆந்திரா வழியாக பணி

மண்டபம்: தமிழகம் வழியாக இலங்கைக்கு, கடல் மார்க்கமாக மின் வினியோகப் பணி, ஆட்சி மாறியதால் ரத்து செய்யப்பட்டு, ஆந்திரா வழியாக பணி துவங்க உள்ளது. மத்திய அரசின் "பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம், பாக் ஜலசந்தி கடல்பகுதியில், மின் வினியோகத்திற்காக மண் ஆய்வுப் பணியை 16.12.2010ல், மண்டபம் பகுதியில் துவக்கியது. ஆய்வு முடிந்த பின், திட்ட மதிப்பீடு ஒதுக்கப்பட்ட உடன், இந்தியாவிலிருந்து தமிழகம் வழியாக, இலங்கைக்கு மின்சார வினியோகம் மேற்கொள்ளப்பட இருந்தது. இதை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் எதிர்த்தனர். இருப்பினும், ஆற்றாங்கரை ஊராட்சி பகுதியில் துவங்கி, இலங்கை தலைமன்னார் வரை கடலில் மண் ஆய்வுப்பணி தொடர்ந்து நடந்தது. தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின், ஆட்சி மாறியதால், தற்போது இலங்கைக்கு, மின் வினியோகிக்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மண் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கு செல்ல உள்ளனர். இதுகுறித்து, மண் ஆய்வுப்பணியை டெண்டர் எடுத்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: