வியாழன், 4 நவம்பர், 2010

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்? நிபுணர்கள் புது தகவல்

பொதுவாக உலகில் பெண்களை விட ஆண்கள் விரைவில் மரணம் அடைந்து விடுகின்றனர். பெண்கள் நீண்ட நாள் வாழ்கின்றனர். இதற்கு, பெண்களின் மரபணுக்களின் தன்மை தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மனிதனுக்கு முதுமை வருவது ஏன் என்பது குறித்து ஆய்ந்த ஐரோப்பிய நிபுணர்கள், "டிஸ்போசபிள் சோமா' என்ற கோட்பாட்டை உருவாக்கினர். இதன்படி, மனித உடல் நிலையற்றது. ஆனால், அதனுள்ளிருக்கும் மரபணுக்கள் நிலையானவை. ஆம். ஒரு மனிதனின் மரபணுக்கள் அவன் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதன் மூலம் அவனது மரபணுக்கள் என்றும் நீடித்து இருக்கின்றன எனக் கொள்ளலாம்.

மனித உடல் என்பது ஒரு கார் போல. அதில் உள்ள மரபணுக்களை சந்ததிகளுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் அதன் வேலை. வாழ்நாள் ஓட்டத்தில் உடலில் உள்ள, செல்கள் மற்றும் திசுக்களில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் உடல் ஒரு காலகட்டத்தில் வலுவிழந்து அழிகிறது. இது எல்லா உயிரினங்களிலும் உள்ளதுதான். ஆனால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களிலும் அவற்றின் பெண்கள் மட்டும் நீண்ட நாள் வாழ்கின்றனர். இதற்கு அவர்களின் மரபணுக்களின் தன்மைதான் காரணம் என பேராசிரியர் டாம் கிர்க்வுட் கூறுகிறார்.

இதுகுறித்து கூறுகையில்,"பெண் உடல் என்பது உற்பத்தி கேந்திரம். அதுதான் சந்ததி விருத்திக்கு ஆதாரம். அது நலமாக வலுவாக இருந்தால் தான் சந்ததி தொடரும். ஆணின் உடலைப் போல் அடிக்கடி அது வலுவிழந்து போனால் ஆரோக்கியமான சந்ததியை அதனால் உருவாக்க இயலாது. அதனால் நீண்ட நாள் வலுவாக வாழ்வதற்கேற்ற தன்மையோடு, பெண்ணின் மரபணுக்கள் அமைந்துள்ளன. ஆணின் உற்பத்தித் திறன் அவனது உடல் நலத்தைச் சார்ந்திருப்பது என்பது மிகக் குறைவே. அதனால் அவன் உடல் விரைவில் அழிகிறது' என்று டாம் தெரிவித்தார்.

அவரது ஆய்வின்படி, இயற்கையாகவே ஆணின் உடலில் உள்ள செல்களை விட, பெண்ணின் உடலில் உள்ள செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதில் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை: