சனி, 6 நவம்பர், 2010

சித்தர்கள் என்றால் யார் யார், என்னென்ன பெயர்களில் சித்தர்கள் இருந்து என்னென்ன


திருப்பூர் கிருஷ்ணன்

                             ல்லாவற்றையுமே கடவுளின் செயலாகப் பார்க்க ஒரு தனியான மனப் பக்குவம் தேவை. அத்தகைய உயர்ந்த பக்குவம் இறுதி நாட்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு வாய்த்திருந்தது. அதனால்தான், "ஒருகாலத்தில் நான் நாத்திகனாக இருந்ததும் இறைவனின் சித்தமல்லாமல் வேறென்ன?' என்று அவரால் பின்னாளில் சொல்லவும் முடிந்தது.

பூரணமாக இறைவனைச் சரணடைந்து  வாழும் ஒரு மரபு நம் தேசத்தில் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. இத்தகைய மனப்போக்கினால் என்ன லாபம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எல்லாம் இறைவன் செயல் என பரம் பொருளிடம் பொறுப்பை விட்டுவிட்டால் மனச் சுமை இல்லை; ரத்த அழுத்தம் ஏற்படு வதில்லை; உடல் ஆரோக்கியம் பிரமாதமாக இருக்கிறது. இவையெல்லாம் மாபெரும் லாபங்கள் இல்லையா?

ஆனால், காலப்போக்கில் சிலரிடம் சோம்பேறித்தனம் வளர்ந்தது. இறைவன் கையையும் காலையும் தந்தது உழைக் கத்தான் என எண்ணாமல், உழைக்காமல் இருந்தாலும் இறைவன் எல்லாவற்றையும் தருவான் என்கிற மூடத்தனம் வளர்ந்தது. இதனால் பலர் பக்தியின் பெயரைச் சொல்லிலி சோம்பேறிகள் ஆனார்கள்.

அந்த நிலையை மாற்றத்தான் மாபெரும் ஞான வீரர்களாக விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் போன்ற மகான்கள் தோன்றினார்கள். மகான்கள் எல்லாரும் இந்து மதத்தை நெறிப்படுத்தப் பிறந்தவர்களே. இந்து மதத்தின் சரியான நெறியை மக்களுக்கு அறிவுறுத்தப் பிறந்தவர்களே.

காலந்தோறும் இந்து மதத்தில் பற்பல மாற்றங்களும் நேர்கின்றன. உடன்கட்டை என்ற மூடப்பழக்கம் முன்பு இருந்தது. கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறிய பெண்கள் மிகச் சிலர்தான். அவர் கள்கூட, கணவன் இல்லாத உலகில் பொருளாதார ரீதியாக எவ்விதம் வாழ் வோம் என்ற அச்சத்தில் உடன்கட்டை ஏறியவர் களாகத்தான் இருக்க வேண்டும்.

பெண் கல்வி முற்றிலும் மறுக்கப் பட்ட காலத்தில் பெண்கள் பொருளா தாரரீதியாக ஆணைச் சார்ந்தே இருந்தாக வேண்டிய நிலை இருந்தது. அப்போது கணவனின் இறப்பு என்பது வாழ்வு முழுவதன் இழப்பு என்றே உணரப்பட்டது.

ஆனால், ஏராளமான பெண்கள் உடன் கட்டை ஏறியதாகச் சரித்திரத்தில் படிக்கிறோமே, அது எப்படி? அந்தச் செய்திகள் உண்மைதான். அவர்கள் எல்லாம் உடன் கட்டை ஏறியவர்கள் அல்லர்; ஏற்றப்பட்ட வர்கள்.

பிறகு இந்தக் கொடுமையை மாற்ற நவீன யுகத்து முனிவர்போல ஒருவர் வந்தார். அவர்தான் ராஜாராம் மோகன்ராய். ஆழ்ந்த ஆன்மிக நம்பிக்கை உள்ள அவர், "பெண்களுக்கு எதிரான இந்தப் பெருங்கொடுமை அதர்மமானது' என்று பிரசாரம் செய்தார். அந்தக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வழி செய்தார். அதன் பிறகுதான் இந்தக் கொடுமை மறைந்தது.

முன்பு கைம்பெண்களுக்கு மொட்டை அடித்து முக்காடு போடும் வழக்கம் இருந்தது. கல்கி தம் "கேதாரியின் தாயார்' என்ற சிறுகதையில் இந்த வழக்கத்தைச் சாடினார். பாரதியார் உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர் கள் இந்தக் கொடுமையான பழக்கத்தை விமர்சித்தார்கள். கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என பல உயர் நிலை ஆன்மிகவாதிகளும் சமூக சீர்திருத்த வாதிகளும் கூறத் தொடங்கினார்கள்.

ஒரு சமூகத்தில் சீர்திருத்தம் என்பது மெல்ல மெல்லத்தான் வரும். ஆனால் மனிதர் களின் மனதை ஊடுருவி நாம் சீர்திருத்தக் கருத்து களை விதைத்து விட்டால், பின்னர் மனித சமூகம் நாம் முயன்று வளர்த்தெ டுத்த முன்னேற்றப் பாதையில்தான் செல்லும்.

இவ்விதம் ஆன்மிகத் தைப் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் சிந்திக்கும் போது, நாம் ஓர் உண்மையை உணர வேண்டும். நாம் மதிக்கும் உயர்நிலைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஆன்மிகவாதிகளும் எல்லாக் காலங்களிலும் சித்தர்களைப் பற்றிச் சொல்லிலியிருக்கிறார்கள் என்பதும்; சித்தர்களைத் தீவிரமாக நம்பி இருக்கிறார்கள் என்பதும்தான் அது.

குள்ளச்சாமி என்ற சித்த புருஷரைப் பற்றி மகாகவி பாரதியார் சொல்லிலியிருக்கிறார். நவீன இலக்கியவாதிகளில் பலர் சித்தர்களைப் பற்றியும் சித்துகளைப் பற்றியும் அறிவதில் நிறைய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

சித்தர்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள் என்று பரவலாக நம்பப்படுகிறது. சித்தர்கள் என்றென்றும் வாழ்பவர்கள் என்றும் நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த இரண்டுமே உண்மைதான்.

சித்தர்கள் அழிவற்றவர்கள். அவர்கள் தெய்வத்தின் தூதுவர்களாக இயங்குபவர்கள். தெய்வத்திடம் பிரார்த்தித்து ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதுபோலவே சித்தர்களைப் பிரார்த்தித்தும் அந்தச் செயலிலில் ஈடுபடலாம். சித்தர்களின் ஆசியோடும் உதவியோடும் செயலில் பூரண வெற்றி பெறலாம்.

மனிதர்களால் இயலா ததை அமானுஷிகம் என்கிறோம். அப்படிப்பட்ட அமானுஷிகமான பல செயல்களை சித்தர்களால் நிகழ்த்த முடியும். நிகழ்த்த முடியும் என்பது ஏன்? இன்றும் அப்படிப்பட்ட பல அற்புதங்களை அவர் கள் பல அடியவர்களின் வாழ்வில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் எத்தனையோ முயற்சி செய்தாலும் நம் கையை மீறிய விஷயங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. திடீரென்று நோய்வாய்ப்படும்போது- திடீரென்று ஒரு திருமணம் நின்று போகும் போது- எத்தனையோ முயற்சி செய்தும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருக்கும்போது, "இப்படியெல்லாம் நடக்கிறதே, ஏன்?' என்ற திகைப்பு நமக்கு எழுகிறது.

இதற்கெல்லாம் காரணம் நாம் முற்பிறவி களில் செய்த கர்ம வினைதான் என்று நம் ஆன்மிகம் சொல்கிறது. முற்பிறவியின் தொடர்ச்சிதான் இப்பிறவி என்கிறபோது, முன்வினைகளால் நேர்கிற சிரமங்களை எப்படிப் போக்கிக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

சித்தர்களைச் சரணடைவதன் மூலம் முன்வினைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிலிருந்து ஒருவன்
முற்றாக விடுபட முடியும். ராமகிருஷ்ண பரமஹம்ச ருக்கும் ரமண மகரிஷிக்கும் புற்றுநோய் வந்ததும்கூட, அடியவர்கள் தங்களைப் பூரணமாகச் சரண் அடைந்தபோது அவர் களின் முன்வினைகளை அவ்விருவரும் ஏற்றதால்தான் என்றொரு கருத்தும் சொல்லப்படு கிறது. தங்களுக்கு வரும் உபாதைகளைப் பற்றி கூடக் கவலைப்படாமல் அடியவர்களைக் காப்பதில் பெரும் அக்கறை செலுத்து பவர்கள் கருணையே வடிவான சித்தர்கள்.

சித்தர்கள் வாழ்ந்தது புனைகதை அல்ல; வரலாறுதான். சித்தர்கள் கடவுளை நம்பியதும், மனிதர்கள் சித்தர்களை நம்பியதும், சித்தர்கள் மூலம் கடவுள் அருள் மனிதர் வாழ்வில் செயல்பட்டதும் கடந்தகாலக் காற்றில் மெய்யாக எழுதப்பட்ட சரித்திரம்தான்.

உண்மையில், அது கடந்த கால வரலாறா? அல்ல; நிகழ்கால வரலாறும்கூட. ஏனெனில் சித்தர்கள் அன்று தொட்டு இன்றுவரை நிரந்தரமாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் அருளாட்சியும் அற்புதங்களும் இன்றும் நம்புகிறவர்களுக்கு உண்மையிலேயே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

பதினெண் சித்தர்கள் என்று சொல்கிறோம். பதினெட்டு என்பது சித்தர்களின் கணக்கல்ல; அது சித்தர்கள் நிகழ்த்தும் சித்துகளின் கணக்கு என்று சிலர் கருதுகிறார்கள்.

பதினெட்டு பேர்தானா? ஒருவகை யில் மகான்கள் எல்லாருமே சித்தர் களாய்த்தான் வாழ்ந்திருக்கிறார்கள். தான் தொட்ட இரும்புக் கம்பியைத் தங்கமாய் மாற்றிய ரசவாதியான வள்ளலார் சித்தர் இல்லை என்றால் வேறு யார் சித்தர்? தன் வேட்டியிலிலிருந்து நூலைப் பிரித்துப் போட்டு, ஒரு பாட்டி கேட்டுக்கொண்டபடி ஆயிரக்கணக்கான பறவைகளை முற்றத்தில் வரவழைத்த சேஷாத்ரி பரப்பிரும்மம்கூட ஒருவகையில் சித்தர் தானே? போண்டா கட்டி வந்த நூலைத் தென்னை மரங்களின் இடையே கட்டி இரவு முழுவதும் அந்த நூலிலில் படுத்துத் தூங்கிய ஷீர்டி சாயிபாபா சித்தர்களுக்கெல் லாம் சித்தரல்லவா!

சித்தர்கள் தங்கள் சித்து களை அறிவித்துக் கொள்வ தில்லை. அது அவர்களுக்கும் உணர்ந்து அனுபவிப்பவர் களுக்கும் இடையேயான பரம ரகசி யம். எனினும் வரலாற்றில் சில அடியவர் களால் தங்கள் வாழ்வில் சித்தர்கள் நிகழ்த்திய சித்துகள் பக்தியுடன் மற்றவர்களுக்கும் சொல்லப்பட்டுள்ளன.

நமது இந்து மதமும் அதன் ஆன்மிக நெறிகளும் சமுத் திரத்தைவிடவும் ஆழமானவை; ஆகாயத்தைவிடவும் பரந்தவை.


நம் ஆன்மிகத்தில் சித்தர்கள் என்றால் யார் யார், என்னென்ன பெயர்களில் சித்தர்கள் இருந்து என்னென்ன அற்புதங்களைச் செய்தார்கள், பாரதியார் போன்ற மெய்ஞ்ஞானிகள் எல்லாம் சித்தர் களைப் போற்றிப் புகழ்வது ஏன், அவர்கள் நிகழ்த்தும் சித்து என்பது எத்தகையது, சித்தர்களின் அருளாசி யோடு எப்படி எல்லாத் துன்பங்களை யும் போக்கிக் கொள்ளலாம், முக்திக்கு மட்டுமல்ல; உலகியல் வாழ்வுக்கும் சித்தர்கள் எப்படியெல்லாம் உதவு

கிறார்கள் என்பதுபோன்ற பல விஷயங்களை நாம் அறிந்துகொள்வது நம் ஆன்மிக வாழ்வுக்கு வளம் சேர்க்கும். அது குறித்து வரும் இதழ்களில் காண்போம்.

கருத்துகள் இல்லை: