வியாழன், 4 நவம்பர், 2010

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனோர் யாரும் உயிருடன் இல்லை: கருணா

இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பில் யாரும் உயிருடன் இல்லையென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாமில் உள்ள 15ஆயிரம் பேர் தவிர ஏனையவர்கள் யாரும் இல்லையென முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மீனவர் சங்க தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

காணாமல் போனோர் தொடர்பிலான தகவல்களை பெற்றார்கள் ஆனால் இதுவரை அது தொடர்பில் எமக்கு எந்த தகவலும் பெற்றுத் தரவில்லை. இறுதி யுத்த காலத்தின்போது காணாமல் போன எமது பிள்ளைகளின் நிலையென்ன போன்ற கேள்விகள் இங்கு மக்களால் எழுப்பப்பட்டன.

இதற்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உள்ள 15 ஆயிரம் பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். ஏனையவர்கள் யாரும் உயிருடன் இல்லை.

இது தொடர்பில் நான் பல்வேறு இடங்களிலும் தேடுதல்கள் நடத்தியிருந்தேன். யாரும் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே இனியும் வீணாக அலையவேண்டாம் அவர்கள் யாரும் உயிருடன் இல்லையென்பதை உறுதியாக கூறுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: