வெள்ளி, 3 நவம்பர், 2017

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், தனது இணையத்தள பக்கத்தில் எதிர்வரும் நாட்களில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதை தேதி வாரியாக தொகுத்து வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

3.11.17 (வெள்ளிக்கிழமை)- தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களின் உள் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்யும்.

4.11.17 (சனிக்கிழமை)- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.

5-11-17 (ஞாயிற்றுக்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

6-11-17 (திங்கட்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும்.

மழை எச்சரிக்கை குறிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டள்ளது. அதில், “நவம்பர் 3-ந்தேதி (இன்று) தென் தமிழ்நாடு முழுவதும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். நாளை (4-ந்தேதி)யும் தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை- (5-11-17) ராயல சீமா மற்றும் ஆந்திராவின் தென் கடலோரப் பகுதிகளில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 5 மற்றும் 6-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: