வெள்ளி, 3 நவம்பர், 2017

தமிழகம் வறட்சியிலிருந்து மீண்டு வந்துள்ளது ,,, இரு ஆண்டுகளாக நிலவி வந்த ...

பருவமழை: உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்!
மின்னம்பலம் : வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்துக்கு நல்ல மழைப்பொழிவை அளித்துள்ளதால் கடந்த இரு ஆண்டுகளாக நீடித்துவந்த வறட்சியிலிருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மிகவும் உற்சாகமாக விதைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த காரிஃப் பருவத்தில் உற்பத்தி அதிகரித்ததால் அறுவடை செய்த உணவுப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், அந்த நேரத்தில் தமிழகம் மட்டும் கடந்த 140 ஆண்டுகளாகக் காணாத வறட்சியில் சிக்கியிருந்தது. இதையடுத்து காரிஃப் பருவ விவசாயம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இந்தப் பருவத்துக்கான விதைப்புப் பணிகளில் விவசாயிகள் உற்சாகத்தோடு ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தங்களது நிலங்களைத் தயார்படுத்தியுள்ளனர்.


காவிரி டெல்டா விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ரங்கநாதன் கூறும்போது, “திருவாரூர் மாவட்டத்தில் நேரடி விதைப்புப் பணிகள் தொடங்கவுள்ளது. நெல் விதைப்புப் பணிகளைத் தொடங்கத் தயாராக உள்ளோம். கடும் வறட்சிக்குப் பின்னர் தேவையான அளவுக்குப் பருவமழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் விதைப்புக்குத் தயாராக உள்ளனர்” என்றார். முந்தைய தென்மேற்குப் பருவமழையால் தமிழக விவசாயிகள் எந்தப் பயனும் அடையாத சூழலில், தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையால் பயனடைய முடியும் என்று நம்புகின்றனர்.
வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் 480 மில்லி மீட்டர் மழை பொழியும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 553 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது மழை மேலும் வலுத்துள்ளது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியே பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: