செவ்வாய், 31 அக்டோபர், 2017

தமிழக வாக்களர் மனநிலை மத்திய உளவுத்துறை + தினமலர் ஆய்வு ? ரஜினிக்கு 19 வீதமாம் ,, நம்புவோம்

தினமலர் : சென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் அந்தர கோலத்தில் இருக்கும் இக்கட்டான சூழல் குறித்து, மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். அறிக்கையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இக்கட்டான பல்வேறு சூழ்நிலைகளில், மத்திய அரசின் மேல்மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு அளிப்பதற்காகவே, மக்களை சந்தித்து உளவுத் துறை அதிகாரிகள் தகவல் திரட்டுவர். சில நேரங்களில் மக்களின் அப்பட்டமான மனநிலையை அறிவதற்காக, கருத்துக் கணிப்பு போல, மக்களை பல்வேறு இடங்களில் சந்தித்து, அவர்களிடம் அவர்களது கருத்தைக் கேட்டு, அதை பதிவு செய்ய சொல்வர். இப்படி பெறப்படும் தகவல்களை ரிப்போர்ட்டாக மேலிடத்துக்கு அனுப்புவர்.
அப்படித்தான், சமீபத்தில், தமிழகத்திலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அவசர கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு பரவலாக, பல்வேறு தரப்பட்ட மக்களையும் சந்தித்து எடுக்கப்படுமே தவிர, பெரிய எண்ணிக்கையில் எடுக்கப்படுவதில்லை. ஆனால், மக்களின் மனங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், பல்வேறு வகையிலான கேள்விகள் அதில் இடம் பெற்றிருக்கும்.



மக்கள் அதிருப்தி:

அப்படி எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், முதல்வர் பழனிச்சாமி மீதும், டி.டி.வி.தினகரன் செயல்பாடுகள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. கிட்டதட்ட 89 சதவீதம் பேர், இருவருக்கும் எதிர்ப்பாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல, அ.தி.மு.க., மீதும் அவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இனியொரு முறை அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.அதற்காக தி.மு.க., மீதும், மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையில்லை. 46 சதவீதம் பேர் மட்டுமே, தி.மு.க.,வை ஆதரிப்பதாக கருத்தை பதிவிட்டுள்ளனர்.

ஆனால், பிரபலமாக இருந்து அரசியலுக்கு தூய்மையான எண்ணத்தோடு வரும் நபரை ஆதரிக்க தயாராக இருப்பதாக 32 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதில் கமலுக்கு 4 சதவீதம் பேரும்; நடிகர் விஜய்க்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர், ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

எடுத்த எடுப்பிலேயே நடிகர் ரஜினி, 19 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று அரசியலுக்குள் நுழைந்தால், அவரது கிராப் சரசரவென ஏறிவிடும். அதன் பின், அவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக இருப்பார்.

தமிழக பா.ஜ.,வைப் பொறுத்த வரையில், அந்த கட்சி குறித்து பெரும்பாலானவர்களுக்கு எவ்வித அக்கறையுமே இல்லை. ஆனால், நிறைய பேர், மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தையும் கடுமையாக எதிர்க்கின்றனர். வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே, தேர்தல் வந்தால் பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருப்போம் என கூறியுள்ளனர். ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்து வந்தால், அவர்களை ஆதரிப்போம் என, 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சி, ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஊழலில் ஊறித் திளைப்பதாக கூறியுள்ள பொதுமக்கள், தற்போது, அதைவிட கூடுதலாகி விட்டதாகவும் கூறியுள்ளனர். மத்திய அரசு ஆதரவில்தான் மாநில அரசு இயங்குவதாக 75 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழக அரசியலில், ரஜினியின் வருகையை மக்களும் பெரிதாக எதிர்பார்ப்பதாக கருத்து கூறியுள்ளனர்.

இதெல்லாம் பதினைந்து நாட்களுக்கு முந்தைய நிலைமைதான். அந்த நிலைமை தற்போது மாறியிருக்க வாய்ப்பில்லை. அதன் பின், மக்கள் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு, எந்த நிகழ்வும் பெரிதாக இல்லை.

அதனால், எடப்பாடி பழனிச்சாமி அரசும், அ.தி.மு.க.,வும் அவர்களது நடவடிக்கைகளாலேயே, செல்வாக்கில் படுபாதாளத்துக்கு போய்க் கொண்டிருப்பதை, உளவுத் துறை அதிகாரிகள், மத்திய அரசுக்கு தகவலாக தெரிவித்து விடுவர். மத்திய அரசு, அதை வைத்து எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளலாம். இதனால், என்ன நடக்கும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

இந்தத் தகவல்களையெல்லாம் கேள்விபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் சரியானதா, மாநில உளவுத்துறை மூலம் தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை: