செவ்வாய், 31 அக்டோபர், 2017

மழை வெள்ளம் ,,, பாடம் படிக்காத அரசு ..தெருக்களில் படகில்தான் கடக்க முடியும்..! (படங்கள்)

நக்கீரன் :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நேற்று காலை முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதில் சென்னையின் பல பகுதிகள் நீரால் சூழ்ந்து காணப்படுகின்றன. பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், பெரும்பாலான சாலைகளும் குளம்போல் காட்சியளிக்கின்றன. வட சென்னையில் பேசின் பிரிட்ஜ் சந்திப்பில், சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால், பாதசாரிகள் சாலையோரம் நடக்க முடியாமலும், சாலையை கடக்க முடியாமலும் அப்பகுதி மக்கள் தவித்தனர். அதேபோல், வாகன ஓட்டிகளும் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து சென்று கடும் சிரமம் அடைந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கான சாலைகளில் ’தெர்மாகோல்’ மூலமாக மட்டும் தான் கடக்க முடியும் என சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தெர்மாகோல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கி உள்ளதால் பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சாலைகளில் தேங்கும் மழைநீரை விரைந்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள் - அசோக்குமார், ஸ்டாலின்

கருத்துகள் இல்லை: