வியாழன், 24 ஆகஸ்ட், 2017

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மட்டுமென்ன கொம்பா முளைத்திருக்கிறது ?

சதீஷ் செல்லதுரை
CBSE என்றாலே வாயப்பொளக்கும் அன்பர்களுக்கு…என்னோட பையன் அதுலதாம் படிக்கிறான்.நான் பாதுகாப்பு படையிலிருப்பதாலும் பல மாநிலங்களுக்கு மாறுதலாவதாலும் அரசுப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற உறுதியாலும் நாடு முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலாயாவில் மகனை சேர்த்தேன்.
கேந்திரிய வித்யாலாயா என்றதும் CBSE யை வாயைப்பொளந்து பார்ப்பது போல பார்ப்பார்கள் நம்மவர்கள். நமது ஊர் அரசுப்பள்ளி எப்படியோ அப்படியே அச்சு அசலாக இருக்கிறது கேந்திரிய வித்யாலாயா. சிலபஸ் மட்டும்தான் வேறு. ஆனால் அந்த அரசு இயந்திர வாத்தியார்கள் பயிற்சி முறைகள் என அனைத்தும் கேந்திரிய வித்யாலாவில்( கே வி) அரசுப்பள்ளி அனுபவத்தை அள்ளித்தரும்.

இந்த கேந்திரிய வித்யாலாவிற்குதான் நம்மவர்கள் சி பி எஸ் இ சிலபஸ் மயக்கத்தில் கோவையில் லட்ச ரூபா லஞ்சமாக கொடுத்தெல்லாம் அட்மிசன் போட துடிக்கிறார்கள். கோவை சூளுர் கேவி பள்ளியில் 35 கிமீ காரில் அழைத்து வந்து பள்ளிக்கருகிலேயே காத்திருந்து மாலையில் குழந்தையை அழைத்து செல்லும் பெத்தவங்க முதல் திண்டுக்கலில் இருந்து இந்த பள்ளிக்காக இடம்பெயர்ந்து கோவை வந்த பெத்தவங்க வரை இருக்காங்க. பீக்கில் இருக்கும் ஹீரோயினாட்டம் திகழ்கிறது கே வி.
ஆனால் வடக்கே நான் இருக்கும் ஜோத்பூரில் கேரளாவை சேர்ந்தவர் நடத்தும் இமானுவேல் எனும் ஸ்கூலில் கொண்டு வடக்கந்தியினர் சேர்க்கின்றனர். கே வி அவர்களை பொறுத்தவரை ஒழுக்கமில்ல்லாத அரசுப்பள்ளி. இமானுவேல் ஸ்கூல் கண்டிப்பான கல்வியில் சிறந்த மதராசிக்கள் நடத்தும் ஸ்கூல். அக்கரைக்கு இக்கரை பச்சை.
இப்போதும் எங்களது படைப்பிரிவு அலுவலகங்களில் பெங்காலிகளும் ,தென்னிந்தியர்களும் தனது திறமையால் ஆதிக்கம் செலுத்தி கொண்டுதான் இருக்கின்றனர். இணையரின் மருத்துவ துறையில் வெறும் செவிலியர் பணியோடு அல்லாது அட்மினிஸ்ட்ரேசன் பணிகளை நம்மவர்களிடம் கொடுத்து வாய் பார்க்கின்றனர் வடக்கவர்கள்.
இந்தி எதிர்ப்பால் நட்டப்படவில்லை நாம். மாறாக சுயமாக வளர்ந்திருக்கிறோம். சி பி எஸ் இ இல்லாமலே நமது கல்வி வடக்கிந்தியர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருக்கிறது. தற்போதைய நீட் தேர்வு மாநிலத்துக்கு ஒரு கேள்வித்தாளாக வஞ்சகமாக காயடிக்க கிளம்பியிருக்கிறது. தனியார் பள்ளிகள் சி பி எஸ் இ வாய்ப்பாடுகளால் அடுத்த கட்ட சம்பாத்யத்திற்கு தயாராகி விட்டனர்.
நகரங்களை சுற்றி கிடக்கும் கிராமங்களில் ப்ளஸ் டூ வில் நல்ல மதிப்பெண் எடுத்தவனுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி எங்கே பெற வாய்ப்புள்ளது? இது வரை நம்மிடமிருந்து வெளியான மருத்துவர்கள் எவ்வகையில் தரமில்லாது போய்விட்டனர்?
இன்று மருத்துவ கல்வியில் கால் பதிக்கும் மத்திய அரசு நாளை மாநிலத்தின் அனைத்து கல்வி உரிமைகளின் சங்கையும் நெறிக்க போகிறது என்பது திண்ணம். எடப்பாடிகளும் பன்னிர்களும் தங்களை காக்க நம்மை,நமது எதிர்காலத்தை ,மக்களை விற்றுக்கொண்டிருக்கின்றனர். ஒரே நாடு ஒரே மொழி என நிர்ப்பந்திக்கும் அற்பர்களிடம் ஆணவத்தோடு சொலவோம் ஒரே நாடு தமிழ் நாடு…. ஒரே மொழி தமிழ்…மாநில உரிமைகளை விட்டுக்க்கொடுக்க அனுமதியோம் என்போம். thetimestamil

கருத்துகள் இல்லை: