வியாழன், 24 ஆகஸ்ட், 2017

தினகரனிடம் தூது போன அமைச்சர் சம்பத் ... எடப்பாடி + பன்னீர் மீது எகிறி பாய்ந்த தினகரன்?

ஆட்சியை காப்பாற்ற தினகரனிடம் அமைச்சர் ஒருவரை ஓ.பி.எஸ் தூது அனுப்பினார் என்ற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார் தினகரன். இதன் எதிரொலியாக, அவரை ஆதரிக்கும் 19 அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சமீபத்தில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். மேலும், தற்போது அந்த எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால், எதிராக 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சுமூகமாக போக முடிவெடுத்த ஓ.பி.எஸ், அமைச்சர் சம்பத்தை அழைத்து “ தினகரனை அமைதியாக இருக்க சொல்லுங்கள். பிரச்சனை எதுவும் வேண்டாம்.

அவர் கட்சியில் வேண்டுமானால் தொடர்ந்து நீடிக்கட்டும். ஆனால், கட்சியை கட்டுப்படுத்த மட்டும் அவர் நினைக்கக் கூடாது. அவர் கூறும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கூட கொடுத்துவிடலாம். அவரிடம் நேரில் சென்று பேசுங்கள்” என அனுப்பி வைத்தாராம்.

இதைத் தொடர்ந்து தினகரனின் வீட்டிற்கு சென்று அவரிடம் இதை கூறியுள்ளார் சம்பத். இது கேட்டு கோபமடைந்த தினகரன் “என்னை கட்சியில் வைத்துக்கொள்ள இவர்கள் யார்?. இது எங்கள் கட்சி.. எங்க ஆட்சி... நாங்கள் வளர்த்துவிட்டவர்கள் இவர்கள்.. இப்போது எங்களுக்கு எதிராக நிற்கிறார்கள்..என்ன செய்வதென்று எனக்கு தெரியும்.” என கோபமாக பேசினாராம்.

ஒருவழியாக அவரை சமாதனம் செய்த அமைச்சர், கோபம் வேண்டாம். எதாவது நடந்து ஆட்சி நம்மை விட்டு போய்விட்டால், நாம் திரும்ப வரவே முடியாது. எனவே, யோசித்து சொல்லுங்கள். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது எனக் கூறிவிட்டு வந்தார் என செய்திகள் உலா வருகிறது. ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் போது அரசியல்வாதிகள் இதுபோன்ற பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சகஜமான, வழக்கமான ஒன்றுதான் என்றாலும், நிகழப்போவதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் வெப்துனியா

கருத்துகள் இல்லை: