செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வெற்றிவேல் : சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்குவதாகச் சொன்னால் விட்டுவைப்போமா?



விட்டுவைப்போமா?சசிகலாவை நீக்குவதாகச் சொன்னால் விட்டுவைப்போமா, அதனால்தான், வைத்தியலிங்கம் மீது டி.டி.வி. தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் தெரரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைத்தியலிங்கம் அறிவித்தார்.
வைத்தியலிங்கத்தின் இந்த அறிவிப்பு தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து வைத்தியலிங்கத்தை நீக்குவதாக தினகரன் அறிவித்தார். இதற்கு பதிலளித்த வைத்தியலிங்கம் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று (ஆகஸ்ட் 22) தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், "சசிகலாவை நீக்குவதாகச் சொன்னால் விட்டுவைப்போமா? அதனால்தான் தினகரன் வைத்தியலிங்கம் மீது நடவடிக்கை எடுத்தார்” என்று தெரிவித்தார்.
அடுத்தடுத்து அதிமுக முதலமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், அது ஆட்சியையும் கட்சியையும் பாதிக்காதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுகவுடன் சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த பன்னீருக்கு எடப்பாடி பழனிசாமி ஏன் பதவி தர வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார் வெற்றிவேல்.

கருத்துகள் இல்லை: