திங்கள், 21 ஆகஸ்ட், 2017

நேபாளத்தில் மாதவிலக்கை தீண்டாமையாக பார்க்கும் வழக்கம்


நேபாளத்தில் மாதவிலக்கை தீண்டாமையாக பார்க்கும் வழக்கம் நீடிக்கின்றது. படம் நன்றி: ராய்ட்டர்ஸ், அல்ஜசீரா.
மாதவிலக்கான பெண்களை அடைத்து வைக்கும் கொடிய பார்ப்பனிய இந்து மத கலாச்சாரமான சௌபாடி(Chhaupadi) வழக்கத்தை பின்பற்றினால் மூன்று மாத சிறை தண்டனை அல்லது இந்திய மதிப்பில் சுமார் 1,924 ரூபாய் (3,000 நேபாள ரூபாய்) அபராதம் என்று ஒரு சட்டத்தை அதிரடியாய்(!) இயற்றி இருக்கிறது நேபாள அரசு.
இந்த சட்டம் பெண்கள் மீதான அமிலத் தாக்குதல்கள், வரதட்சணை கொடுமைகளுக்கும் பொருந்தும். இச்சட்டத்தை 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நடைமுறைப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் கிட்டத்தட்ட 60% முதல் 70% பெண்கள் வரதட்சணைக் கொடுமைகள், அமிலத் தாக்குதல்கள், பலதார மணங்கள், கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொடுமைப்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் பெண்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் சௌபாடி கலாச்சாரத்திற்கு எதிராக 2005 -ம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை முன்மொழிந்திருந்தாலும், அவை சட்டமாகவில்லை. எதார்த்தத்தில் இந்த மூடப்பழக்கமானது நேபாளப் பெண்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது.

பசுமாட்டுக் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் 2017 -ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாம்புத் தீண்டி மாண்டு போனது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.
தொடர்ச்சியாக சமூக ஆர்வலர்களின் வழியுறுத்தல்களால் தான் இந்த பெயரளவு சட்டம் கூட இயற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் எந்த அளவு இந்த வழக்கத்தை தடை செய்யும் என்பதை அதன் தண்டனையின் அளவைப் பார்த்தாலே நாம் அறிந்து கொள்ளலாம். வெறும் மூன்று மாதம் சிறைத்தண்டனையும் 1,900 ரூபாய் அபராதமும் விதித்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடுமா என்ன?
மாதவிலக்கை இழிவெனக் கருதும் அங்கே, நேபாளப் பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து புகார் அளிப்பது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. அதுமட்டுமல்லாமல் இந்த சட்டத்தின்படி கொட்டகையில் அடைக்கப்படும் பெண்கள் பாம்புக்கடியினாலோ, பாலியல் பாலாத்காரத்தினாலோ உயிரிழந்தாலும் அதே மூன்று மாத தண்டனையைத்தான் கொடுக்க முடியும். அதனால் இது ஏட்டுச் சுரைக்காயாக இருக்குமென்பது தெளிவு.
மன்னராட்சியில் இருந்து விடுபட்டிருக்கும் நேபாளத்திற்கு இச்சட்டம் ஒரு சிறு முன்னேற்றம் என்றாலும் அங்கே பார்ப்பனியத்திற்கு எதிராக நடக்கவேண்டிய போராட்டங்களும், சமூக மாற்றங்களும் நிறைய இருக்கின்றது.
செய்தி ஆதாரம் :

கருத்துகள் இல்லை: