வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

தமிமுன் அன்சாரிக்கு அமைச்சர் பதவி ... தூண்டில் .. சிக்குவாரா?

அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கூட்டும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியுள்ளது.
இந்தச் சூழலில் அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள்... மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று பேரும் தங்களது ஆதரவு யாருக்கு என்று இன்னும் தெரிவிக்கவில்லை. இது குறித்து மின்னம்பலத்தில் மூவர் அணி எந்த அணியில் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களில் தமிமுன் அன்சாரி மட்டுமே முஸ்லிம் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர். இவருடைய ஆதரவு எடப்பாடிக்கா அல்லது தினகரனுக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாகப்பட்டினம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கூவத்தூர் சம்பவத்தின்போது தனது ஆதரவை யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை தொகுதி மக்களின் கருத்துகேட்டு அதன்படி தெரிவிப்பேன் என்று கூறினார். அப்போது, அதன்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாக்குதலும் நடத்தப்பட்டது. தமிமுன் அன்சாரி அப்போது சசிகலா ஆதரவு அணியின் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தார்.
இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும் தினகரன் ஆதரவு தரப்பிலிருந்தும் தமிமுன் அன்சாரி தங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியை வழங்குவதாக ஆஃபர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது, சிறுபான்மை நலத்துறை அமைச்சராக உள்ள நிலோஃபர் கபீல் அப்படி ஒன்றும் ஆக்டிவாக செயல்படவில்லை. அதனால், இளமையான துடிப்பான ஒருவரை அந்தத் துறைக்கு நியமிக்க வேண்டும் என்று இபிஎஸ் அணியும் தினகரன் அணியும் திட்டமிடுகின்றனர். எனவே, தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்தால் அவருக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவி வழங்க இரண்டு தரப்புமே அவருக்கு ஆஃபர் தெரிவித்து முன்வந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இபிஎஸ் அணியை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்துவரும் நிலையில், முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஆதரவு தெரிவித்தால், அவருக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவி வழங்கி பாஜக கைப்பாவை என்ற பழிச் சொல் ஒழியும். அதே நேரத்தில் ஓர் உறுப்பினரின் ஆதரவும் கிடைத்தது என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இபிஎஸ் அணி திட்டமிடுகிறது.
அதேபோல, தினகரன் அணியும் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்தால் அவரை சிறுபான்மை நலத்துறை அமைச்சராக்கிவிடாலம் என்று ஆஃபர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சிறுபான்மையினருக்கான சரியான பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார். அதனால், தமிமுன் அன்சாரிக்கு இபிஎஸ், தினகரன் இரண்டு அணிகளுமே தமிமுன் அன்சாரிக்கு அமைச்சர் பதவி தருவதற்கு முன்வந்து ஆஃபர் வழங்கி உள்ளது.
இதனால், தமிமுன் அன்சாரியின் ஆதரவை இரு அணிகளுமே எதிர்பார்த்திருக்கின்றன. தமிமுன் அன்சாரி ஆதரவு யாருக்கு என்பது விரைவில் தெரியவரும்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: