ஞாயிறு, 31 ஜூலை, 2016

மூடக் கிறுக்கல்கள்: 1008 நாமஜெப பித்தலாட்டங்கள்

ஆடுமாடுகளுடன் வந்தவர்க்கு வீடுவாசல்  கொடுத்து பிறர்க்கு கேடு விளைவிக்கும் மூட மதியினைப் பீடமேற்றியது ஆரியம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண  ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே ! இந்த மகா மந்திரத்தை எழுதியவர் 14ஆம் நூற்றாண்டில் (1486) ல் கிழக்கு வங்காளத்தில் நாதியா என்ற கிராமத்தில் பிறந்த பிறந்த
சைதன்ய மஹா பிரபு.  மன்+திரம் என பிரித்து ‘மன்’ என்றால் மனம்; ‘திரம்’ என்றால் விடுவிப்பது. அதாவது அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பதால், ‘ஹரே கிருஷ்ண’ மந்திரத்திற்கு, மகா மந்திரம் என்று பெயர். சரி இருக்கட்டுமே அதற்கென்ன. நன்றாகத்தானே இருக்கிறது?  என்று நீங்கள் நினைப்பது போல் தான் நானும் நினைத்திருந்தேன் அதிலுள்ள நயவஞ்சகத் தன்மை புரியும் வரை.


தமிழிலிருந்த தொன்மையான நூல்கள் பலவற்றை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துத் தனதாக்கிக் கொண்ட வட ஆரியர்கள் நம் தமிழ் மொழியை அழிக்கவும் தமிழர்களை அறிவிலும் பொருளாதாரத்திலும் வளர விடாமல் தடுக்கவும்  செய்த எண்ணற்ற சூழ்ச்சிகளை சான்றோர் அறிவர்.

இவர்கள், இந்தியாவின்  பூர்வகுடிகள் படிப்பதற்குத் தடையாயிருந்தனர் . அப்படியே மீறி ஓரளவு படித்தவனையும் மேற்கொன்டு சிந்திக்க விடாமல் ஒரே இடத்தில் கட்டிப் போட வேண்டுமென்றால் மூடநம்பிக்கைகளை அவர்களிடத்தில் விதைத்துவிட வேண்டுமென்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டனர்.

ஏனென்றால் எண்ணற்ற செந்தமிழ் இலக்கியங்கள் தமிழில் இருக்க அவற்றைப் படித்துவிட்டால் நம்முடைய ககுட்டு வெளிப்பட்டு விடுமே.. நமக்கல்லவோ ஆபத்து என்று தொலைநோக்குப் பார்வையில் அவன் சிந்தித்ததின் விளைவுதான் மகா மந்திரங்களை 108 முறை தினம் ஜபிப்பது, நூற்றியெட்டு முறை , ஆயிரத்து எட்டு முறை , லட்சத்து எட்டு முறை , கோடி முறை எழுதுவது என்பதெல்லாம்..

தினம் 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்றும்.. ஸ்ரீ கிருஷ்ண  ஜெயம் 1008 முறை எழுதினால் கூப்பிட்ட நேரமெல்லாம் கண்ணன் வந்து அருள்தருவான் என்றும் இப்படி ஏகப்பட்ட பிதற்றல்களை அவன் சொல்ல இவர்கள் கேட்டு மதிமயங்கி ராம நாமம் கிருஷ்ண ஜெயம் என்று இருந்துவிட்டதும் இருப்பதும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நூறு முறை ஆயிரம் முறை கூட பரவாயில்லை ; "ஸ்ரீ ராமஜெயம்" என்ற மந்திரத்தை ஒரு கோடி முறை  எழுதினால் நேராக சொர்கம்தானாம்.   தினமும் காலையில் நீராடி பக்தியுடன் 108 முறை எழுதினால் 33 வருஷத்தில்   ராம்கோடி எழுதி முடித்துவிட்டு சொர்கத்துக்கு போய்விடலாமாம். எவ்வளவு ஈன புத்தி என்று பாருங்கள்.

அதனால்தான்,
"ஆடுமாடுகளுடன் வந்தவர்க்கு வீடுவாசல்  கொடுத்து பிறர்க்கு கேடு விளைவிக்கும் மூட மதியினைப் பீடமேற்றியது ஆரியம் " என்று அண்ணா சொன்ன வரிகள் ஆரியர்களின் பிடரியை உலுக்கியது .
"ஸ்ரீ ராம ஜெயமாவது பரவாயில்லை 3 வார்த்தைகள் தான். ஆனால் மேலே சொன்ன சைதன்ய மஹா பிரபு எழுதிய " ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண  ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே !" இந்த மாகா மந்திரம் 16 வார்த்தைகளைக் கொண்டது.

இது மஹா பாகவதத்தையும் பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதாம். இந்த வார்த்தைகளை படித்தாலோ  கேட்டாலோ பாகவதம் மொத்தம் படித்த புண்ணியம் கிட்டிவிடுமாம். இதை 1 கோடி முறை எழுதினால் ஸ்ரீ கிருஷ்ணனிடமே நேராக சென்றுவிடலாமாம்.  அதுவும் வேறெந்த சிந்தனையுமில்லாமல் கிருஷ்ண சிந்தனையிலேயே இருந்து எழுத வேண்டுமாம்.

என்னுடைய கணக்குப்படி.... (இதற்காகவே நான் எழுதிப்  பார்த்தேன்)

ஒரு முறை இந்த மகா மந்திரத்தை எழுதுவதற்கு 30  செகண்ட் தேவைப்படும். அதாவது ஒரு 20 -30 வயதுக்குள் இளமையும் உடல்நலனும் வேகமும்  இருக்கும்போது. அப்படியென்றால் ஒரு நாளைக்கு 2.30 மணி நேரம் எழுதினால் 275 முறை எழுதிவிட முடியும்.

275 முறை ஒரு நாளைக்கு எழுதினால்  99 வருடத்தில் எளிதாக முடித்து விடலாம். (ஆஹா.. )

ஆனால்  வயதாக வயதாக எழுதும் வேகம் குறையும் உடல்நலனும் கண்பார்வை குறைவும்  முதுகுவலிம், இன்னபிறவும் என ஏகப்பட்ட பிரச்சனைகளைத்தாண்டி எழுதவேண்டுமென்றால் 45-50 வயதுக்குமேல் ஒரு நாளைக்கு 108 முறை கூட எழுதுவது கடினமாகிவிடும்.

இதை எழுத்துவதாலேயே முதுகுவலி கழுத்து வலி வருவதோடல்லாமல் அதே சிந்தனையில் ராமா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டிருந்தானென்றால் அப்படியே பைத்தியம் பிடித்து சாக வேண்டியதுதான். (இதைத்தானே எதிர்பார்த்தார்கள்)


இதில் இன்னொரு விசேஷமும் உண்டு... அதாவது ராம கோடி எழுதுபவர்கள் முடிப்பதற்குள் இறந்து விட்டால் மீதத்தை அவர்கள் வாரிசுகள் யாராவது எழுதி முடித்தால் அவர்களுக்கு இரட்டிப்புப் புண்ணியமும் உண்டாம்.(வாரிசுகளும் பைத்தியமாகி விடுவார்கள்)

இப்போது புரிகிறதா? அந்தக் காலத்திலெல்லாம் 3 ஆம் வகுப்பு 4 ஆம் வகுப்பு படித்தாலே போதுமானது. ஸ்ரீ ராம ஜெயம் எழுத கற்றுக் கொள்வார்கள். அவர்களை அதைத் தவிர வேறு படிக்கவோ சிந்திக்கவோ புதிதாக ஏதும் கற்றுக்கொள்ளவோ எழுதவோ விடாமல் இப்படி எழுதினால் மோட்சமென்று சொல்லி வாழ்க்கையையே வீணாக்கி இருக்கிறார்கள்.

என்னே இவர்கள் திறமை? ஒரு சமூகத்தையே ஏமாற்றுமளவிற்கு அவ்வளவு அறிவும் திறமையும் ஒருங்கே பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் இந்த ஆரிய பார்ப்பனர்கள். இவர்களின் அறிவையும் திறமையையும் கண்டு நான் உண்மையிலேயே வியந்து போகிறேன்.

இராமாயணம் மகாபாரதம் போன்ற கற்பனைக் கதைகளெல்லாம் மிக்க சுவராஸ்யமானவை தான். அவற்றிலுள்ள தமிழையும் தமிழ்ச் சுவையும் இலக்கிய அழகையும் படித்து மகிழுங்கள்.  சில நல்ல அறிவுரைகள் இருக்கத்தான் செய்கின்றது அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் மூடத்தனமாக எதையும் பின்பற்றாதீர்கள். அதனால் தீங்கு நமக்குத்தான்.

எனக்குத் தெரிந்து இப்போது கூட ராம கோடி எழுதுபவர்கள் உண்டு.

இனியாவது நன்றாக சிந்தித்து பகுத்தறிந்து செயல் படுங்கள். எல்லாமே கட்டுக் கதைகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  இதுபோன்ற மூடக் கிறுக்கல்களில் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.

 - லதாராணி பூங்காவனம் 

கருத்துகள் இல்லை: