சனி, 13 மே, 2017

மானாமதுரையில் நிலாச்சோறு .. இந்து இஸ்லாமிய கிருஸ்தவர்கள் ஒன்றாக கூடி ...

‘மதமா... அப்படினா?’ - மானாமதுரையில் ஓர் அசத்தல் விழா!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஒவ்வோர் ஆண்டும் வைகையில் அழகர் ஆற்றில் இறங்கிய நாளுக்கு மறுநாள், இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் ஆற்றின் கரையோரத்தில் அமர்ந்து ‘நிலாச்சோறு’ சாப்பிடுவது அப்பகுதியினரின் வழக்கம்.
இந்நிலையில் இந்த விழாவனது கடந்த சில ஆண்டுகளாக, மதங்களைக் கடந்து மனித மனங்களை ஒன்றிணைக்கும் விழாவாகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் நடந்த ‘நிலாச்சோறு’ உண்ணும் விழாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களும் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று நிலாச்சோறு சாப்பிட்டு, இந்து மக்களுடன் உறவாடி மகிழ்ந்தனர்.
தனிப்பட்ட முறையில் பல இந்து மக்களின் அழைப்பை ஏற்று, நெருங்கிய நண்பர்களாக விளங்கும் பிற மதத்தினரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக சுற்றுப்பட்டுக் கிராமங்களைச் சார்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் தயார் செய்து கொண்டுவந்த சைவம் மற்றும் அசைவ உணவுகளை அங்கு நிலாச்சோறு உண்ண வந்தவர்களுடன் பகிர்ந்து உண்டு, பசியாறினர். மேலும் தங்களின் அழைப்பை ஏற்று வந்த, பிற மத நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்ச்சி பொங்க உபசரித்தனர்.
விழா முடிந்து போகும்போது டேவிட்டின் நண்பன் ஆனான், மாரிச்சாமி. மாரிச்சாமியின் உற்ற தோழன் ஆனான் செய்யது இஸ்மாயில். இறுதியில் நீர் அதிகம் இல்லாத வைகையில், மதங்களைத் தாண்டிய மனிதம் கரைபுரண்டது. அதுதானே நிஜம்!  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: