புதன், 10 மே, 2017

சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை! நீட் தேர்வு படையெடுப்பை தவறான கோணத்தில் அணுகும் ...

thetimestamil.com : ஜி. கார்ல் மார்க்ஸ்: ஒரு பிரச்சினையை சரியான விதத்தில் அணுக முடியாவிட்டாலும் தவறான விதத்தில் அணுகாமல் அமைதியாக இருந்தாலே பாதி தீர்வு கிடைத்துவிடும். நீட் விவகாரம் இதற்கு சரியான உதாரணம்.
அச்சு, காட்சி ஊடகங்களும் மற்றும் இணையமும் தேர்வு மையங்களில் சட்டையை வெட்டியதையும், தோடு வளையலைக் கழட்டியதையுமே தலையாய பிரச்சினையாக உணர்ச்சிப்பெருக்கோடு எழுதி உண்மையான ஆபத்து எதுவென்பதை வழக்கம்போல இருட்டடிப்பு செய்துவிட்டன.
மீதி இருப்பவர்களும் நீட் தேர்வை ஏழை, கிராம, அரசு பள்ளி மாணவர்களுக்கான பாதிப்பாக குறிப்பிடுகின்றனர். அதில் ஓரளவுக்கு உண்மை இருப்பினும், நீட்டுக்கு முன்பான மருத்துவ மாணவர் சேர்க்கையில் எத்தனை சதம் அத்தகைய மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பதையும் பார்க்க வேண்டும். புள்ளி விவரங்கள் 5% க்கும் குறைவு என்கின்றன. ஆக இந்த நீட்டால் பெரிதும் பாதிக்கப்படப் போவது மீதமுள்ள 95% நகர்ப்புற, தனியார் பள்ளி மாணவர்கள் என்று கருத இடமிருக்கிறது.

அவர்கள் ஏன் நீட் தேர்வு குறித்து அஞ்சவேண்டும்?அவர்கள்தான் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கிட்டத்தட்ட நூறு சதவிகித மதிப்பெண் எடுக்கிறார்களே? பிறகு என்னதான் பிரச்சினை? நாமக்கல் பள்ளிகளைப்போல, கல்வியை ஓட்டப்பந்தயத்திற்கு முன்பு கொடுக்கப்படும் ஊக்கமருந்துபோல கொடுத்து, +1 பாடங்களை நடத்தாமல் +2 பாடத்தை மட்டுமே இரண்டு வருடங்களுக்கு உருவேற்றி எந்திரங்களைப் போல வெளித்தள்ளப்படும் மாணவர்களின் உண்மையான திறன் குறித்த கவலை அது.
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது நமது மதிப்பீட்டு முறைகள் பொருத்தமற்றவை என்பதே. பதினொன்றாம் வகுப்பு பாடங்களைப் புறக்கணித்துவிட்டு செல்வது உண்மையில் கல்வி முறைக்கு எதிரான செயல்பாடு. இந்த நீட் மாத்திரம் அல்ல, இதற்கு முன்பே competitive தேர்வுகளில் நாம் உருவாக்கும் மாணவர்கள் சோபிப்பதில்லை என்பது விவாதிக்கப்படுகிறதுதான்.
இது பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே. இதை சரி செய்துவிடவும் முடியும். மேலும் +1 க்கும் பொதுத்தேர்வு உண்டு என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த நீட்டின் மூலம் நாம் உண்மையாக இழக்கப்போவது வேறு ஒன்று என்பதுதான் இதில் இருக்கும் ஆபத்து. இதை ஊடகங்கள் முதல் சாமானிய மக்கள் வரை கவனம் கொள்ளவில்லை என்பதுதான் கவலைக்குரியது. அது என்ன என்று பார்ப்போம்.
சென்னையின் மையப்பகுதியில் இருக்கிறது ஐஐடி. சென்னையைச் சுற்றி உள்ள மக்களுக்கும் ஏன் மொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே அது தொடர்பில்லாத ஒன்றாக இருக்கிறது. அங்கு எதாவது போராட்டமோ கலவரமோ வந்தால் மட்டுமே அப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பதே சமூகப் பரப்புக்கு வரும். அதில் படிப்பவர் யார்? மிக மிக குறைந்த அளவிலேயே நம் மாநிலத்தவர். பல மொழிகள் பேசும் மாணவர்கள் அங்கு இருக்கிறார்கள். அந்த உலகமே முழுக்கவும் வேறானது. அது சென்னையில் இருக்கிறது என்பதைத் தவிர நாம் பெருமைப்பட அதில் ஏதுமில்லை. ஆனால் நமது மருத்துவக் கல்லூரிகள் அப்படி அல்ல.
நம்மிடம் உள்ள 45க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு விட்டுக்கொடுத்தது போக மீதமிருந்த இடங்களை நான் நிரப்பிக்கொண்டிருக்கிறோம் (இதுவும் பழைய புள்ளி விபரம்). இதன் பொருள் நமது மாணவர்கள் தங்களுக்குள்ளேயே போட்டியிட்டு அதற்கான இடத்தை அடைகிறார்கள் என்பதே. அந்த போட்டியிலேயே ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் ஐந்து சதவிகிதத்தைதான் அடைய முடிகிறது. இந்த நீட் தேர்வின் மூலம் அது இன்னும் குறைந்துவிடும். ஆனால் பெரும் பாதிப்பை அடையப்போவது மீதமுள்ள நகர்ப்புற மாணவர்கள்தான்.
ஏனெனில் இந்திய அளவிலான போட்டியை அவர்கள் எதிகொள்ளவேண்டும். அது அவ்வளவு சிரமமா? நமது மாணவர்கள் திறன் குறைந்தவர்களா என்றால் இல்லை. அவர்கள் இதை சமாளிப்பார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த நிலையை மருத்துவத்துறையில் எட்டுவதற்கு நாம் நிறைய உழைத்திருக்கிறோம். எவ்வளவு குறை சொன்னாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிட நமது அரசியலாளர்கள் செய்திருப்பது இங்கு நிறைய. அந்த உழைப்பின் பலன்களை நாம் இந்த நீட் தேர்வின் மூலம் விட்டுதரப்போகிறோம் என்பதுதான் இங்கு கவனத்திற்குரியது.
மருத்துவத்துறையில் கிட்டத்தட்ட தமிழகத்தில் நடந்திருப்பது புரட்சி. மிகப்பெரிய அளவிலான ஆபரேஷன்களைக்கூட அரசு மருத்துவமனைகளில் சாத்தியப்படுத்திய, ஒப்பீட்டு அளவில் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கக்கூடிய தனியார் மருத்துவமனைகளை வைத்திருக்கிற, நிறைய super specialty மருத்துவர்களை உருவாக்கி தமிழகத்தை Medical Tourism கேந்திரமாக உருவாக்கி நிலைநிறுத்திய நாம் அந்த சொகுசுகளை இழக்கப்போகிறோம் என்பதே இதன் பின்னுள்ள பிரச்சினை. நமது மருத்துவக் கல்லூரிகள் ஐஐடிகளைப் போல நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போகும் என்பதே இதன் பின்னுள்ள ஆபத்து. அதற்கு எதிரானதே நமது மருத்துவர்கள் நிகழ்த்திய போராட்டம். அதை மக்களிடம் கொண்டு செல்வதில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எல்லாமே தவறியிருக்கின்றன.
மேலும் இந்த தேர்வின் மூலம் மாநில அரசுகள் தங்களது சமூக நீதி செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் வேலைபார்க்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய மாநில அரசின் செயல்பாடு ‘அரசு மருத்துவமனைகளில் நிபுணர்களை உறுதிபடுத்தும் மக்கள் நல செயல்பாட்டின்’ ஒரு அங்கமே. இந்திய மெடிக்கல் கவுன்சிலின் இந்த குறுக்கீடு அதில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதன் பின் World Health Organization’ போன்றவற்றின் கைகள் உண்டு.
Super Specialty போன்றவற்றில் நாம் ஏற்கனவே நிறைய இடங்களை இழந்துவிட்டோம். அவை மற்ற மாநிலத்தவர்களுக்குப் போய்விட்டன. அதனால் அத்தகையை நிபுணர்களை மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
இப்போது இளங்கலையில் இந்த நீட் அறிமுகம் பொருத்தமற்ற ஒரு போட்டியை ஏற்படுத்தி நமது மாணவர்களை மருத்துவத்தில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு அப்புறப்படுத்தப்போகிறது. இப்போது இல்லாவிட்டாலும், நீண்ட கால நோக்கில் இதன் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும்.
நாம் எதிர்நோக்கி இருக்கும் ஆபத்து இதுவே… சட்டையைக் கிழிப்பதும் தோட்டைக் கழட்டுவதும் அல்ல பிரச்சினை!
(Vidhya Varadaraj நீட் குறித்து எழுதியிருந்ததில் சிறிய திருத்தங்களுடன் மேலும் கொஞ்சம் தகவல் சேர்த்திருக்கிறேன். அவருக்கு நன்றி!)
ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்.

கருத்துகள் இல்லை: