செவ்வாய், 9 மே, 2017

விஜயபாஸ்கர் மாமனாருக்கு மூன்று ஆண்டுகள் சிறை!

மின்னம்பலம் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை முன்னிலையில் ஆஜரானார். பின்னர் அவரது மனைவியிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து விஜயபாஸ்கருக்கு எதிரான ஆதாரங்களை வருமான வரித்துறை திரட்டியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட அந்த வழக்கில், சுந்தரத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் மே 8ஆம் தேதி திங்கட்கிழமை (நேற்று) உத்தரவிட்டுள்ளது. சுந்தரத்தின் அண்ணன் துரைசாமி தொடர்ந்த வழக்கில், தம்பிகள் சுந்தரம் மற்றும் கோபால் ஆகியோருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், 20,000 ரூபாய் அபராதத் தொகையைக் கட்டி, விஜயபாஸ்கர் மாமனார் சுந்தரம் ஜாமீன் பெற்றார்.

கருத்துகள் இல்லை: