திங்கள், 8 மே, 2017

அய்யாக்கண்ணு :பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கவிடின் ..

பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: அய்யாகண்ணு
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி மீண்டும் டெல்லி சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருளுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு கூடுதலாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 41 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் தங்களின் போராட்ட வழிமுறைகளாலும் போராட்ட வடிவத்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பி பார்க்கவைத்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை நேரில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், அவர்கள், விவசாயிகளின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து விவசாயிகள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தமிழகம் திரும்பினார்கள்.
ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மே 8ஆம் தேதி திருச்சியில் உள்ள தில்லை நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடர்வது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இது தொடர்பாக மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட உள்ளோம்.

தமிழகத்தில் வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்தபடி வருகிற மே 15ஆம் தேதிக்குள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 10 லட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.   மின்னம்பலம்

இந்த முறை 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தவும், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க தலைவர்கள் அனைவரும் மே 21ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கூடி அகில இந்திய விவசாய போராட்டக் குழு அமைக்கப்படும்.” என்று கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: