வெள்ளி, 12 மே, 2017

நீட் தேர்வு – அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !

பிழைப்புவாதமும் அடிமைத்தனமும்
நமது  மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்யும் போது தான் நாமும் இந்த ரூல்ஸ் ராமானுஜங்களை, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?, அவர்கள் தங்கள் கடமையைத் தானே செய்தார்கள்’ என்று அங்கீகரிக்கிறோம்.
டந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதில் இருந்தும் சுமார் 11 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு விதிமுறைகளை சி.பி.எஸ்.ஈ உருவாக்கி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிக்கையாக வெளியிட்டது. அதில் மாணவர்களின் கல்வித் தகுதி, மதிப்பெண் தகுதி உள்ளிட்ட விவரங்களோடு, உடைகளுக்கான விதிமுறைகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தது. அவை,
  • கருப்பு நிற உடைகளையோ, அடர் நிற உடைகளையோ அணியக்கூடாது. வெளிர் நிற உடைகளையே அணிய வேண்டும்.
  • ஆண்களும் பெண்களும் முழுக்கை மேலாடை அணியக் கூடாது. மேலாடைகளிலோ, கீழாடைகளிலோ பெரிய பட்டன்கள் இருக்கக் கூடாது.
  • உடம்பில் / துணியில் துளி கூட உலோகங்கள் இருக்கக் கூடாது.
  • பூட்ஸ் அணியக் கூடாது. ’ஹை-ஹீல்ஸ்’ அணியக் கூடாது.
  • மோதிரம், வளையல், ப்ரேஸ்லெட், செயின், நெக்லெஸ், மூக்குத்தி, தோடு உள்ளிட்ட ஆபரணங்கள் அணியக் கூடாது. திருமணமான பெண்களுக்கு மட்டும் தாலியும், வளையலும் அணிந்து கொள்ள அனுமதி உண்டு.
  • தலைமுடியைக் கட்டும் பெரிய ரப்பர் பேண்டுகள், பெல்ட், தொப்பி, புர்கா, பைஜாமா, குர்தா, சேலை ஆகியவை அணியக்கூடாது.
மாணவர்கள் ‘பிட்’ மற்றும் ‘காப்பி’ யடிப்பதைத் தடுக்கும் பொருட்டே இத்தகைய கறாரான உடைக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகக் கூறியிருக்கிறது சி.பி.எஸ்.ஈ. அதாவது, கருப்பு / அடர் நிற உடைகள் மூலமும், உடையில் இருக்கும் உலோகங்கள் மூலமும், காதில் போடும் தோடுகளின் மூலமும் முறைகேடுகளில் ஈடுபட முடியும் எனத் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு சிந்தித்து இவற்றை எல்லாம் தேர்வு அறைக்கு வெளியே விடவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றது சி.பி.எஸ்.ஈ.
சி.பி.எஸ்.ஈ இந்த ஆடை விதிமுறைகளை, அனைத்துத் தேர்வு மையங்களிலும் கறாராக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 07.05.2017 ஞாயிறு அன்று நடைபெற்ற நீட் தேர்வில் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் பல்வேறு அவலங்கள் அரங்கேறின.
சென்னையில் இரண்டு நிமிடம் தாமதமாக வந்த மாணவியர் மூவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது எனக் கூறி வெளியேற்றியிருக்கின்றனர். அதனைக் கண்டித்து மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து போராடிய பின்னும் போலீசை வைத்து மிரட்டி, அப்பெண்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். சென்னையில் முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையின் கைகளை அரைக்கைச் சட்டை அளவிற்கு கிழித்த பின்னரே அவர்களைத் தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் குஜராத்தில் முழுக்கைச் சட்டையுடன் மாணவர்கள் எவ்விதத் தடையுமின்றி தேர்வு எழுதியிருக்கிறார்கள்
பெங்களூருவில் ஒரு மாணவியின் காதணிகளைக் கழற்ற முடியாதபடி அதன் திருகாணி கழண்டு வராத நிலையில் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறிய பிறகு, அப்பெண் தனது  தந்தையுடன் உடனடியாக அருகில் உள்ள தங்க நகை ஆசாரியிடம் சென்று காதணியை வெட்டி எடுத்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தனர்.
ஆந்திராவில் பல இடங்களில் தலைமுடியை கட்டும் முடி பேண்டுகள் நீக்கப்பட்டால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்தக் கெடுபிடிகளால் அங்கு மாணவிகள் அனைவரும் தலைவிரி கோலமாகவே தேர்வு எழுதினர்.
தென்னிந்தியா முழுவதும் கருமை நிற மற்றும் அடர் நிற ஆடைகள் அணிந்துள்ள மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை. பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அவசர அவசரமாக வெளியில் சென்று தேடிப்பிடித்து வெளிர் நிற ஆடைகளை வாங்கி வந்தனர்.
கேரளாவில் பெண் ஒருவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் உலோக பட்டன் ’மெட்டல் டிடெக்டர்’ கருவியில் சத்தம் கொடுத்ததும் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதி மறுத்தனர். அப்பெண் தனது தந்தையிடம் இது குறித்துக் கூறியதும், அவர் தனது மகளின் ஜீன்ஸ் பேண்டில் இருந்த உலோக பட்டனை அறுத்தெடுத்தார். அதன் பின்னரே அப்பெண்ணை தேர்வுக்கு அனுமதித்தனர்.
இவை அனைத்திற்கும் மேலாக, இழிவுகளின் உச்சமாக நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே அடர் நிற ஆடை அணிந்திருந்த ஒரு மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதன் பின்னர், அப்பெண்ணின் தாயார் அருகில் உள்ள பகுதிகளில் அலைந்து தேடி ஒரு மாற்று உடையை அம்மாணவிக்கு வாங்கி வந்து கொடுத்துள்ளார். தேர்வு ஆரம்பிக்க 10 நிமிடம் மட்டுமே உள்ள சூழலில் அப்பெண் மீண்டும் பரிசோதனை வளையத்திற்குள் செல்லும் போது மெட்டல் டிடெக்டர் பரிசோதனையில் அப்பெண்ணின் உள்ளாடையின் கொக்கிக்கு ‘மெட்டல் டிடெக்டர்’ சத்தம் எழுப்பியுள்ளது. அப்பெண்ணின் உள்ளாடையைக் கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும், அதுவும் தேர்வு தொடங்கும் நேரத்திற்குள் உள்ளாடையைக் கழற்றிவிட்டு வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அம்மாணவி வேறு வழியில்லாமல் அலுவலர்கள் இருந்த பரிசோதனை அறையிலேயே தனது மேல் உள்ளாடையைக் கழட்டி அதனை வாயிலில் இருந்த தனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு அவசர அவசரமாகத் தேர்வுக்குச் சென்றுள்ளார்
இச்சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது, அவர்கள் கூறிய ஒரே பதில், “விதிமுறைகளில் கூறியதை நாங்கள் அப்படியே பின்பற்றினோம், இதில் தவறு ஏதும் இல்லை” என்பது தான். விதிகளைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன அந்த அலுவலர் தனது மகளை அவ்வாறு பொதுவெளியில் நடத்தியிருப்பாரா ? அல்லது தனது மகளுக்கு அவ்வாறு நிகழ்ந்திருந்தால் சும்மாயிருந்திருப்பாரா? பிழைப்புவாதமும் அடிமைத்தனமும் நமது மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்யும் போது தான் நாமும் இந்த ரூல்ஸ் ராமானுஜங்களை, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?, அவர்கள் தங்கள் கடமையைத் தானே செய்தார்கள்’ என்று அங்கீகரிக்கிறோம்.
தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் மக்களின் மீது தமது மேலதிகாரிகளின் உத்தரவிற்கிணங்க வெறிநாய் போல பாய்ந்து குதறும் போலீசுக்கும், இராணுவத்திற்கும் இதே அடிமைத்தனம் தான் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த அடிமைத்தனத்தைத் தான் இராணுவப் பயிற்சியிலும், போலீசுப் பயிற்சியிலும் பிரதானமாக சொல்லித் தருகின்றனர். இந்த அடிமைத்தனம் தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதியப் படிநிலையின் ‘ஒழுக்கமாக’ நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் மீதான இந்தக் கடுமையான ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக விமர்சித்த பெற்றோர்கள் வெகு சிலரே. இது குறித்து மூச்சே விடாமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் பெற்றோர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. “நான் சொல்வதே சட்டம், அதுவே சாசனம்” என்ற பாகுபலியின் எதேச்சதிகார  வசனத்திற்கு கைதட்டி ரசிக்கும் கூட்டம் இருக்கும் போது சுய மரியாதைக்கு எங்கே போவது?  vinavu

கருத்துகள் இல்லை: